உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமியின்புதிய நாவல் “The Tale of KAHO” இன்று ஜப்பானில் வெளியான நிலையில், நள்ளிரவு முதலே புத்தகத்தை வாங்க ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. என்ன விவரம் என்று பார்க்கலாம்.
டோக்கியோவில் உள்ள முக்கிய புத்தகக் கடை ஒன்றின் முன்பு, புத்தகம் விற்பனைக்கு வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். நள்ளிரவு 12 மணி அடித்தவுடன் புத்தகத்தை முதலில் வாங்குவதற்காக அவர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
ஒரு புத்தகம் வாங்க இவ்வளவு கூட்டமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வியக்கவைத்துள்ளது. அப்படி என்ன புத்தகம் என்று பார்க்கும்போது, புகழ்பெற்ற எழுத்தாளர் ஹருகி முரகாமியின் “The Tale of KAHO” என்ற புதிய நாவலாகும். இந்த நாவலின் சிறப்பம்சம் என்னவென்றால், அவரது எழுத்து வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு பெண் கதாநாயகியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட முழுநீள நாவல் இதுவாகும். இதுவரை அவரது பெரும்பாலான நாவல்களில் இளைஞர்கள் அல்லது நடுத்தர வயது ஆண்களே கதாநாயகர்களாக இடம்பெற்றிருந்தனர்.

ஹருகி முரகாமி
இந்த நாவலின் கதாநாயகி 26 வயதான காஹோ ஆவார். குழந்தைகளுக்கான புத்தகங்களை உருவாக்கும் எழுத்தாளரான காஹோவின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல விசித்திரமான சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. ஒரு நாள் பதிப்பக ஆசிரியர் ஏற்பாடு செய்த அறிமுக சந்திப்பில் கலந்து கொள்ளும் காஹோவிடம், ஒரு இளைஞர் “நான் பல பெண்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் உன்னைப் போன்ற அழகற்ற பெண்ணை பார்த்ததில்லை” என்று கூறுகிறார்.
இந்த வார்த்தைகளால் கோபப்படாமல், அதன் அர்த்தத்தை அறிய முயலும் காஹோவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து மர்மமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுதான் புத்தகத்தின் மையக்கரு. இந்த நாவல் குறித்து ஹருகி முரகாமி கூறுகையில், “காஹோவின் மனநிலைக்குள் நானே சென்று, அவளது பார்வையில் இருந்து இந்த நாவலை எழுதினேன்” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில், “காஹோ” என்ற சிறுகதையாக இந்தக் கதை முதன்முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோவில் உள்ள வாசேடா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வாசிப்பு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது 2024 ஜூன் மாதம் Shincho இலக்கிய இதழில் வெளியானது. அதன் பிறகு இதே கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மேலும் மூன்று கதைகளை முரகாமி எழுதியுள்ளார். இந்த நான்கு கதைகளையும் ஒருங்கிணைத்து, 352 பக்கங்கள் கொண்ட நான்கு அத்தியாயங்கள் அடங்கிய முழுநீள நாவலாக “The Tale of KAHO” தற்போது வெளியாகியுள்ளது.
புத்தகதகம் வாங்குவதற்காக கூடியிருப்பவர்கள்
புத்தகத்தை வாங்கிய ரசிகர்கள் பலரும், ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து முரகாமி கதை சொல்லும் விதத்தை அறிய ஆவலாக இருப்பதாக தெரிவித்தனர்.
குறிப்பாக, பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் தோற்றம் சார்ந்த மதிப்பீடுகள் மற்றும் மனநிலைகளை அவர் சித்தரித்த விதம் தங்களை ஆச்சரியப்படுத்தியதாக பெண் வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான “The City and Its Uncertain Walls” நாவலுக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த புதிய படைப்பு, உலகம் முழுவதும் உள்ள ஹருகி முரகாமி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
