போர்க் காலங்களில்கூட முறியடிக்கப்படாத இந்த ஒப்பந்தத்தை, தற்போது இந்தியா தன்னிச்சையாக நிறுத்திவைத்திருப்பது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என பாகிஸ்தான் மிரட்டியுள்ளது.
பாகிஸ்தான் திடீரென இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம்தான் தற்போது பதற்றத்தை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் கூறியது என்ன? இந்தியா கொடுத்த பதிலடி என்ன?
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய பகல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்தது. இதனால் அதிர்ந்துபோன பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பலவேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அதேசமயம், கடுமையான வார்த்தைப் போரைத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக, ’தண்ணீரை ஓர் ஆயுதமாகவோ, அழுத்தப் புள்ளியாகவோ இந்தியா பயன்படுத்தக் கூடாது. சிந்து நதி பாகிஸ்தானின் உயிர்நாடி, எங்கள் தண்ணீர் உரிமையைப் பறிக்க முயன்றால், அதற்கு ஒட்டுமொத்த நாடும் தகுந்த பதிலடி கொடுக்கும்’ என பாகிஸ்தான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

சிந்து நதி
அதுமட்டுமின்றி, பகிரப்பட்ட நதி நீரை ஒருபோதும் ஆயுதமாக்கக் கூடாது என்றும் நீர்நிலைகளின் போக்கை மாற்ற முயன்றால், அது தெற்காசியாவின் அமைதியில் படுமோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும். போர்க் காலங்களில்கூட முறியடிக்கப்படாத இந்த ஒப்பந்தத்தை, தற்போது இந்தியா தன்னிச்சையாக நிறுத்திவைத்திருப்பது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என பாகிஸ்தான் மிரட்டியுள்ளது. இதற்கு இந்தியா கொடுத்த பதில்தான் பாகிஸ்தானை அதிர வைத்துள்ளது. “பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும், ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது. பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை முழுமையாக ஒழிக்கும்வரை இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்” என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் முக்கிய நதி நீர் ஆதாரங்களுக்கு இந்தியா முட்டுக்கட்டை போட்டுள்ளதால், அந்நாடு விவசாயம் மற்றும் மின் உற்பத்தியில் திணறி வருகிறது. இந்நிலையில், இந்தியா தனது கட்டுப்பாட்டில் உள்ள நதி நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
