மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பலத்த தோல்வியடைந்த நிலையில், முதன்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த மேற்கு வங்கத்தில். பாஜக அரசு எடுத்துள்ள திடீர் முடிவுதான் இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பலத்த தோல்வியடைந்த நிலையில், முதன்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்த அரசு மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பள்ளி மதிய உணவுத் தயாரிப்பில் இருந்து முட்டைகளை நீக்க முடிவு செய்துள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த மலிவான உணவுகளில் முட்டையும் இருக்கும் நிலையில், அதன் மதிப்பை உணர்ந்தும், ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் வகையிலும், பல மாநில அரசுகள் தங்களது பள்ளி மதிய உணவுத் திட்டங்களில் குழந்தைகளுக்கு முட்டையைச் சேர்த்துள்ளன.

சுவேந்து அதிகாரி
அதேநேரத்தில், இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் முட்டைகள் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, பாஜக ஆளும் சில மாநிலங்களில் மதிய உணவுத் திட்டங்களின்கீழ் மாணவர்களுக்கு முட்டைகளை வழங்குவதில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன. அரசின் மதிய உணவுத் திட்டத்தின்கீழ், முட்டையை ஒரு துணை ஊட்டச்சத்துப் பொருளாகச் சேர்த்த 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கு வங்கமும் ஒன்றாகும். ஆனால், இன்று 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில், 14 மாநிலங்களில் மட்டுமே மதிய உணவில் முட்டை இடம்பெறுகிறது.
முட்டையைத் தவிர்த்த மாநிலங்களை உற்றுநோக்கினால், பாஜக ஆளும் அரசுகளின் ஆதிக்கம் அங்கு நிலவுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில், அசாம், ஒடிசா, உத்தரகாண்ட், பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டுமே தற்போது பள்ளி உணவில் மாநில அரசின் ஆதரவுடன் கூடிய முட்டைத் திட்டம் சீராக நடைமுறையில் உள்ளது. ஆனால், பாஜக தற்போது 17 மாநிலங்களிலும் , அதன் கூட்டணிக் கட்சிகள் 5 மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், முட்டையை நிராகரித்த ஒரே கட்சி பாஜக மட்டுமல்ல, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லாதபோதும்கூட, மதிய உணவில் முட்டையை அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை.

அந்த வகையில், பாஜகவின் தற்போதைய புதிய அரசான மேற்கு வங்கமும் இணைந்துள்ளது. அது, கொல்கத்தா பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்கும் பொறுப்பை இஸ்கானிடம் ( ISKCON-சர்வதேச கிருஷ்ண உணர்வு சங்கம்) ஒப்படைத்துள்ளதுடன், இனி மதிய உணவில் முட்டைகள் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. இவ்விவகாரம் மேற்கு வங்க அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து விமர்சித்துள்ள திரிணாமுல் காங்கிரஸின் இணைச் செயலாளர் டெரெக் ஓ’பிரையன், மேற்கு வங்க பாஜக அரசு குழந்தைகளின் ஊட்டச்சத்தைப் பறிப்பதாகவும், மாநிலத்தில் சைவ உணவைத் திணிக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். முட்டை விவகாரத்தை ஓர் அரசியல் அல்லது சமூகப் பிரசினையாகக் கருதாமல், குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் திட்டமாகக் கருத வேண்டும் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.
