ஈரான் – அமெரிக்கா போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 3 மாதங்களில் இல்லாத அளவாக கச்சா எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
Summary
சவூதி, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் போர் காலத்தில் முடக்கியது உலக சந்தையில் கடும் விலை ஏற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது போர் முடிவடைந்து நீரிணை திறக்கப்பட இருப்பதால், 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு பேரல் விலை 83.59 டாலராக குறைந்து, எரிவாயு மற்றும் எண்ணெய் பற்றாக்குறை தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் அதிக அளவு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளாக சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், குவைத் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயின் பெரும்பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.
அதாவது உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 20% பங்கு ஈரான் – ஓமன் கடல் பகுதியில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஈரான் – அமெரிக்கா இடையே போர் தொடங்கிய நிலையில், ஈரான் ராணுவம் ஹோர்முஸ் நீரிணையை யாரும் பயன்படுத்தமுடியாத வகையில் முடக்கியது.

இதனால் கச்சா எண்ணெய்க்கு உலகளவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்தது. குறிப்பாக மார்ச் 9-ஆம் தேதியன்று, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 119 அமெரிக்க டாலர்கள் என வரலாற்றிலேயே இல்லாத உச்சபட்ச விலையை எட்டியது. அதன் பின்னர் சற்று குறைந்தாலும், தற்போது வரை 90 டாலர்களை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், போர் முடிவுக்கு வருவதாக ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. இதன் உடனடி தாக்கம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் எதிரொலித்து ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது.
நேற்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 87.33 டாலராக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 4.70% வரை சரிந்து 83.59 டாலராக விற்பனையாகிறது. இது கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த விலை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய எரிவாயு, கச்சா எண்ணெய் பற்றாக்குறையும் விரைவில் முடிவடையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
