துணைவேந்தர், முதல்வர் காலிப்பணியிடங்கள் நிரம்பாததால் தமிழக உயர்கல்வி நிர்வாகமும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.
Summary
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 12 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாமை, 105 அரசுக் கல்லூரிகளில் முதல்வர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாதது உயர்கல்வித் தரத்தைப் பாதித்துள்ளது. யு.ஜி.சி பிரதிநிதி விவகாரத்தில் அரசு-ஆளுநர் மோதல் நீதிமன்றத்துக்குச் சென்றதே இந்நிலைக்குக் காரணமாக கூறப்படுகிறது.
தமிழக உயர்கல்வித் துறை கடுமையான நிர்வாகச் சிக்கலில் தவித்து வருகிறது. மாநிலத்தின் 12 முக்கியப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாததும், 105 அரசுக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதும் உயர்கல்வியின் தரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

Anna University
தமிழக உயர்கல்வித் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான நிர்வாக முடக்கத்தைச் சந்தித்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜ், பாரதியார், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மாநிலத்தின் முன்னணி பல்கலைக்கழகங்கள் கடந்த பல மாதங்களாகத் துணைவேந்தர்கள் இன்றித் தவித்து வருகின்றன.
துணைவேந்தர் தேர்வுக்கான தேடல் குழுவில் யு.ஜி.சி பிரதிநிதியைச் சேர்ப்பது தொடர்பாக, முந்தைய திமுக அரசுக்கும் அப்போதையை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நீதிமன்ற வழக்காக மாறியதே இந்த முடக்கத்திற்குக் காரணம். தற்போது இப்பல்கலைக்கழகங்கள் ஐ.ஏ. எஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்களால் தற்காலிகமாக இயக்கப்படுவதால், முக்கியக் கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் கல்விசார் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

madurai kamaraj university
”பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாதது, கேப்டன் இல்லாத கப்பல் போன்றது. அது எப்போது வேண்டுமானாலும் மூழ்கலாம்; தலைமை இல்லாமல் கல்வி நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட முடியாது” என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.
மறுபுறம், மாநிலத்திலுள்ள 188 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், பாதிக்கும் மேலான 105 கல்லூரிகளில் நிரந்தர முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணிமூப்பு தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்தபோதிலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் உயர்கல்வித் தரம் முற்றிலுமாகச் சரிந்துள்ளதாக அரசு கல்லூரி ஆசிரியர் கழகப் பொதுச்செயலர் சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

Ambedkar Law university
இந்த விவகாரம் குறித்து உயர்கல்வித் துறைச் செயலர் அருண் ராய் தரப்பில் கூறுகையில், “நீதிமன்ற வழக்குகள் முடிந்தவுடன், விரைவில் துணைவேந்தர் மற்றும் கல்லூரி முதல்வர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசும் ஆளுநர் தரப்பும் உடனடியாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காணாவிடில், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
