சட்டமன்ற தேர்தலில் தனிம்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தவெக தலைவர் விஜயை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைக்கவேண்டும் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
Summary
தமிழகத்தில் வரலாறு காணாத மும்முனை தேர்தலில் தவெக 34.92% வாக்குகளுடன் 108 இடங்களை வென்று, 1967க்கு பின் திமுக-அதிமுக இல்லாமல் தனி பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மை இல்லாததால் தொங்கு சட்டசபை நிலை நீடிக்க, காங்கிரஸ் மட்டுமே ஆதரவு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆளுநர் விஜயை அழைக்காமல் இழுத்தடிப்பது அரசமைப்புக்கு முரணானது என பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு காணாத ஒரு மும்முனை போட்டியை கண்டுள்ளது. முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளை பதிவுசெய்த விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்றதோடு, 1967-க்கு பிறகு திமுக, அதிமுக இரண்டில் ஒன்றில்லாமல் தனிபெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் முதல் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற எம்ஜிஆரின் (33.52%) சாதனையை முறியடித்து விஜய் வரலாறு படைத்துள்ளார்.

விஜய்
விஜய்யின் தவெக 108 தொகுதிகளை வென்றபோதிலும், பெரும்பான்மையை எட்டாததால் தொங்கு சட்டசபையே தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகளுக்கு தவெக ஆதரவுகோரியிருக்கும் நிலையில், காங்கிரஸ் மட்டுமே இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தசூழலில் முதலமைச்சராக பதவியேற்க ஆளுநருக்கு விஜய் உரிமைகோரியிருந்த நிலையில், அவர் விஜய்க்கு அழைப்பு விடுக்காமல் இருந்துவருகிறார். இதனால் தமிழக அரசியலில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்களில் விஜய்க்கு எதிராக பரப்புரை செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய்க்கு மக்கள் ஆணை கிடைத்தபோதும் ஆளுநர் அர்லேகர் இழுத்தடிப்பது அருவருக்கத்தக்கது என கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “ஆளுநரின் நடத்தை அருவருக்கத்தக்கது, ஏற்றுக்கொள்ள முடியாதது, அரசமைப்புக்கு முரணானது. நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் விஜய்க்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. சட்டமன்றத்தில் தனது உரிமையை நிலைநாட்ட விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்” என பேசியுள்ளார்.
