தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் கர திரைப்படம் கொண்டாடப்படும் என்று மாரி செல்வராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Summary
தனுஷ், மமிதா பைஜூ நடித்த ‘கர’ பட ட்ரெய்லர் வரவேற்பு பெற்ற நிலையில், படத்தை பார்த்த மாரி செல்வராஜ், இது மிகச் சிறந்த திரை அனுபவம், சிலிர்ப்பு, சிந்தனை, நெகிழ்ச்சி தரும் நம்பிக்கையான படம் என புகழ்ந்துள்ளார். ஒடிசாவின் ஜித்து முண்டா அனுபவித்த வங்கி அநீதியை, அவரது முகத்தை கரசாமியாக திரையில் கொண்டு வந்ததற்காக படக்குழுவுக்கு நன்றியும் அன்பும் தெரிவித்துள்ளார்.
தனுஷ், மமிதா பைஜூ, ஜெயராம், கருணாஸ் எனப் பலரும் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள படம் `கர’. ஏப்ரல் 30ம் தேதியான இன்று இப்படம் வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Kara
போர் தொழில் திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் சிறந்த கதைகளை தேர்வுசெய்யும் தனுஷ் இருவரும் இணைந்திருக்கும் ’கர’ மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படத்தை பார்த்த மாரி செல்வராஜ் புகழ்ந்து பேசியுள்ளார்.
கர படம் குறித்து தன்னுடைய எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் தனுஷ், “இப்போது தான் “கர” பார்த்து முடித்தேன். சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் மிக சிறந்த திரை அனுபவத்தை, திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை , திரை சிந்தனையை, திரை விறுவிறுப்பை எனக்குள் தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையான படமாக இருந்தது. நேற்று பார்த்து உலுக்கிய ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை இன்று திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டு வந்து உசுப்பிய தனுஷ் சார் அவர்களுக்கு அவ்வளவு நன்றியையும் அன்பையும் சொல்ல தோன்றுகிறது. அத்தோடு இப்படியான ஒரு படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் நன்றியும் அன்பும்.. கர கொண்டாடப்படும்..” என படக்குழுவை பாராட்டியுள்ளார்.
சமீபத்தில் ஒடிசாவில் ஜித்து முண்டா என்ற நபரின் சகோதரி இறந்துவிட்ட நிலையில், அவருடைய வங்கி கணக்கில் இருந்த 20ஆயிரம் பணத்தை எடுக்க பலமுறை வங்கிக்கு அலைந்துள்ளார். அங்குள்ள வங்கி அதிகாரிகள் இறப்பு சான்றிதழ் கொண்டுவர சொல்லாமல், கணக்கில் வைத்திருப்பவர்கள் நேரில் வரவேண்டும் என அலட்சிய பதிலை சொன்னதாக கூறப்படுகிறது. வங்கி ஊழியர்களின் பதிலால் மனமுடைந்த ஜித்து முண்டா, இறந்து புதைக்கப்பட்ட சகோதரியின் சடலத்தை தோண்டி எடுத்து வங்கிக்கு சென்ற அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
