மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 54 பந்தில் சதமடித்த சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
Summary
வான்கடேவில் நடந்த மும்பை-சென்னை ஐபிஎல் மோதலில், சிஎஸ்கே 170-180 ரன்களில் முடிந்திருக்க வேண்டிய இன்னிங்ஸை சஞ்சு சாம்சன் தனி ஆட்டத்தால் 207 ரன்களுக்கு தூக்கிச் சென்றார். பிச்சின் தன்மை, பார்ஸ்கோர், அணியின் வீக் பாயிண்ட் எல்லாம் கணக்கிட்டு ஆங்கராக விளையாடிய சஞ்சுவை, “கணிச்சான், அறிஞ்சான், புரிஞ்சான்” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் புகழ்ந்தார்.
2026 ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டி நேற்று வான்கடேவில் பரபரப்பாக நடைபெற்றது.

மும்பை, சிஎஸ்கே
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 207 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக பந்துவீசினாலும், ஒரு பக்கம் நங்கூரம் போட்டு நிலைத்து நின்றுஆடிய சஞ்சுசாம்சன் தனியாளாக சிஎஸ்கேவை நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார். 10 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என விளாசிய அவர், எப்போதெல்லாம் விக்கெட் விழுகிறதோ அப்போதெல்லாம் மொமண்ட்டம் பெரிதாக இழக்காமல் பார்த்துக்கொண்டார், அதேபோல பிரேவிஸ், கார்த்திக் சர்மா போன்ற வீரர்களுக்கு தன்னுடைய அறிவுரைகளை வழங்கி அணிக்கு தேவையானதை பார்த்துக்கொண்டார்.

sanju samson century
ஒருபக்கம் மலைபோல நின்று ஆடிய சஞ்சு சாம்சன் 170-180 ரன்களில் நிறுத்தவேண்டிய ஸ்கோரை 207-க்கு அழைத்துச்சென்றார். இந்தசூழலில் தான் சஞ்சு சாம்சனின் பேட்டிங் திறமையை புகழ்ந்து பாராட்டியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
சஞ்சு சாம்சனை புகழ்ந்த அஸ்வின்..
தன்னுடைய யூடியூப் சேனலில் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், சஞ்சு சாம்சன் எப்படி தன்னுடைய ஆட்டத்தை ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்பவும், போட்டியின் நிலைக்கு ஏற்பவும் கட்டமைத்தார் என்பதை பாராட்டி பேசினார்.
சஞ்சு குறித்து அவர் பேசுகையில், “பல சிங்கிள்களை சஞ்சு சாம்சன் எடுக்கவில்லை, அணிக்காக ஆங்கரிங் ரோல் பேட்டிங் செய்தார், ஆனாலும் இறுதியில் அவர் 54 பந்தில் சதமடித்தார். ஒருவேளை அவர் அடிக்க முயன்று அவுட்டாகியிருந்தால் 180 ரன்களில் சிஎஸ்கே சுருண்டிருக்கும். தற்போது 100 ரன்னில் மிகப்பெரிய வெற்றி, ரன்ரேட் பயங்கரமா ஏறிடுச்சுனு என்ன வேணா சொல்லலாம், 104 ரன்னுக்கு எதிரணி ஆல்அவுட்டாகும் ஒரு பிட்ச்சில் உங்களை 207 ரன்னுக்கு அழைத்துசென்றார் என்றால் அவர், ஆடுகளத்தை எப்படி புரிந்து விளையாடியிருப்பார் என்று பாருங்கள்.
இந்த ஆடுகளத்திற்கு இவ்வளவு ரன்கள் இருந்தால் போதும், நாம் ஒரு 10-20 ரன்கள் எக்ஸ்ட்ரா எடுத்தால் வெற்றிபெற்றுவிடலாம் என கணக்கிட்டு அற்புதமாக விளையாடினார். ஷிவம் துபே வந்தபோது சிங்கிள் எடுத்து கொடுத்தார், கார்த்திக் சர்மா வந்தபோது நீ ஸ்பின்னர்ஸ அடினு அல்லோவ் பண்ணார், அதற்கு இடையில் மோசமான பந்தாக வந்தால் அதையும் அவர் தண்டித்தார். அவன் சரியா விக்கெட்டை கணிச்சான், தன்னோட அணியோட வீக்னஸ் என்னனு அறிஞ்சான், பார் ஸ்கோர் என்னனு புரிஞ்சான் 207 ரன்கள் ஸ்கோரை எடுத்துட்டுவந்தான். அவருடைய இன்னிங்ஸ் தான் போட்டியை வெல்ல அச்சாணியாக இருந்தது” என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
