சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி என்.டி.ஏ கூட்டணியில் உள்ள அமமுக வேட்பாளரை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பரப்புரை மேற்கொண்டார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூரில் போட்டியிடுகிறார். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை, தான் இச்சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என பாஜக தலைமைக்கு கடிதம் எழுதியிருந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
எனினும், அவர் என்.டி.ஏ கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் இன்று காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் என்.டி.ஏ கூட்டணிக் கட்சியான அமமுகவின் வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். காரைக்குடித் தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடவுள்ள நிலையில், நட்சத்திரத் தொகுதியாக விளங்குகிறது. அதேசமயம், நேற்றைய முன் தினம், தவெக தலைவர் விஜய் காரைக்குடி தொகுதியில் சாலைவளம் சென்றிருக்கிறார். இந்த சூழலில் தான், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று காரைக்குடியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், காரைக்குடியில் நடந்த விஜயின் சாலை வலத்தைப் பார்த்தேன். அரசியல் என்பது வாகனத்தின் மேல் அமர்ந்து கை காட்டுவது அல்ல, மக்களுடன் மக்களாக இருக்க வேண்டும். காமராஜர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அதேபோல, 9 ஆண்டுகள் சிறையிலும் இருந்தார். கஷ்டத்தை பார்த்து இருக்கிறார். இந்தத் தேர்தலில் 17 லட்சம் பேர் முதன்முறையாக வாக்களிக்கவிருக்கிறார். இளைஞர்கள், அரசியல் என்றால் என்ன? அரசு அமைப்பது எப்படி என்பது தெரியாதவர்களுக்கு வாக்களித்து என்ன செய்யப்போகிறீர்கள். மாற்றம் வேண்டும் என்றால் என்.டி.ஏ கூட்டணிக்கு வாக்களியுங்கள் என தெரிவித்துள்ளார்.
