டி20 உலகக்கோப்பை தொடரின் நாளைய போட்டியில் அபிஷேக் சர்மா இடம்பெறுவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணி இதுவரை அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் அபிஷேக்கின் தொடர் சறுக்கல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவர் நாளைய போட்டியில் விளையாடுவார் என்றே தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அவர் விளையாடும் பட்சத்தில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று முதல் சூப்பர் 8 சுற்று தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தானும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தப் போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு எளிதாகும் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபிஷேக் சர்மா
மேலும், தொடர் வெற்றியில் உள்ள இரு அணிகளும், நாளை நடைபெறும் போட்டியிலும் அதைத் தக்கவைக்க முயலும். இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து மீண்டும் மீண்டும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மறைமுகமாக தாக்க, முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரோ, அறிவுரை வழங்கியுள்ளார். இந்த நிலையில், நாளைய போட்டியில் அவர் இடம்பெறுவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
வயிற்றுப் பிரச்னை காரணமாக நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாத அபிஷேக், அடுத்த வந்த அமெரிக்கா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக டக் அவுட் முறையில் வெளியேறினார். ஹாட்ரிக் டக் அவுட் அடித்த சாதனைப் பட்டியலிலும் இடம்பிடித்தார்.

Sanju SamsonIPL 2025
இந்திய அணி இதுவரை அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் அபிஷேக்கின் தொடர் சறுக்கல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவர் விரைவில் ரன் குவிக்க வேண்டும் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர். இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம் எனவும், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் செய்திகள் கசிகின்றன. எனினும், அபிஷேக் சர்மாவை ஆடும் லெவனில் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை என இந்திய அணி உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல், “அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து அணிக்குள் எந்த விவாதமும் எழவில்லை. அவர் அணிக்காகவும், ரசிகர்களுக்காகவும் நிச்சயம் சிறப்பாக ரன் குவிப்பார். வலைப்பயிற்சியில் அவர் மிகச் சிறப்பாகப் பந்தை அடித்து விளையாடுகிறார். அவர் விரைவில் தனது பழைய ஃபார்முக்குத் திரும்புவார்” எனத் தெரிவித்துள்ளார். அபிஷேக்கின் இடம் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருப்பதால், சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காது என்பது தெளிவாகியுள்ளது.
