பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் சூழலில், பிசிபி இந்த விளக்கத்தைக் கேட்டிருப்பது அந்நாட்டு கிரிக்கெட் அரசியலை உலுக்கியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் சேர்க்கப்பட்டது குறித்து தனது தேசிய தேர்வுக் குழுவிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் சந்தித்தத் தோல்விகளைத் தொடர்ந்து 3-ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா உட்பட 7 வீரர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், முகமது ரிஸ்வான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு பிசிபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் இமாம் ஆகியோரை பரிந்துரைத்ததற்கான காரணம் மற்றும் அடிப்படை குறித்து விளக்கம் அளிக்குமாறு அதில் கேட்கப்பட்டுள்ளது.

pcb reuters
மேலும் வீரர்களின் செயல்திறன்கள், தேர்வுக்கான அளவுகோல்கள் மற்றும் இந்தச் செயல்பாட்டின் போது கருத்தில் கொள்ளப்பட்ட பிற காரணிகளை விவரிக்கும் எழுத்துப்பூர்வ விளக்கங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். தவிர, நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் உறுப்பினர்கள் பதிலளிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் சூழலில், பிசிபி இந்த விளக்கத்தைக் கேட்டிருப்பது அந்நாட்டு கிரிக்கெட் அரசியலை உலுக்கியுள்ளது. இதற்கிடையே, தலைமைப் பயிற்சியாளர் சர்ஃபராஸ் அகமது மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் உமர் குல் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மைக்கேல் ஹெஸன் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
