தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பான தொழில்துறை, உற்பத்தி, கட்டுமானம், மின்சாரம் ஆகிய துறைகளில் 33% பங்குடன் முன்னணியில் உள்ளது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் தொழில்துறையின் பங்களிப்பு முக்கியமானது. தமிழகத் தொழில்துறை நிலவரம், அது எதிர்கொள்ளும் சவால்கள், பட்ஜெட்டில் அத்துறையின் எதிர்பார்ப்புகள் பற்றி பார்க்கலாம்.
ஒரு மாநிலப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குவது தொழில்துறை. உற்பத்தி, கட்டுமானம், மின்சாரத்தை உள்ளடக்கிய இத்துறையின் பங்கு தமிழ்நாட்டின் மொத்தப் பொருளாதாரத்தில் 33 சதவீதமாக உள்ளது.

Minister keerthana with Hyundai team
நாட்டிலேயே அதிகபட்சமாக 40000 தொழிற்சாலைகளுடன் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. மேலும், 570000 அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (எம்எஸ்எம்இ) நிறுவனங்களும் இங்கு இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில், தமிழ்நாட்டின் ஆயத்த ஆடைகள் பிரிவு 17906 கோடி ரூபாய் மதிப்புடன் 31 சதவீதப் பங்கையும், தோல் பொருட்கள் பிரிவு 5119 கோடி ரூபாய் மதிப்புடன் 29 சதவீதப் பங்கையும் கொண்டு இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளன.
அதேபோல், மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில் 46698 கோடி ரூபாய் மதிப்புடன் 21 சதவீதப் பங்கையும், மின்னணுப் பொருட்கள் தயாரிப்பில் 11490 கோடி ரூபாய் மதிப்புடன் 16 சதவீதப் பங்கையும் கொண்டு தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இருப்பினும், தமிழகத் தொழில்துறை தற்போது சில புதிய சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது.

Minister Keerthana
முக்கிய முதலீட்டு வாய்ப்புகள் ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களை நோக்கிச் செல்லும் நிலையில், புதிய முதலீடுகளைத் தொடர்ந்து ஈர்ப்பதற்கான சாதகமான சூழலை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. தொழில்துறையில் அதிகரித்து வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் முறையைக் கட்டுப்படுத்தி வரன்முறைப்படுத்துவதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
மறுபுறம், திறன்மிகு தொழிலாளர்கள் பற்றாக்குறை, மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்கட்டணச் சுமை போன்றவை சிறு தொழில்முனைவோருக்குப் பெரும் சவால்களாக உருவெடுத்துள்ளன. எனவே, தாக்கல் செய்யப்பட இருக்கும் தமிழக பட்ஜெட்டில் சிறு தொழில்களுக்கான மானியங்கள், புதிய தொழில் பூங்காக்கள், சிறப்புத் திறன் பயிற்சி நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான கொள்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு தொழில்துறையினரிடையே எழுந்துள்ளது.
