`மகான்’ படத்தை அறிவிக்கும்போது அனிருத்தான் அந்தப் படத்தில் இருந்தார். பின்னர் நான் பணியாற்றினேன்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். ஆகஸ்ட் 1ஆம் தேதி இவரது `தி ஒன்’ இசை கச்சேரி நடைபெற உள்ளது. இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “ `அரசன்’ படத்துக்கு நீங்கள் இசையமைக்கவில்லையே ஏன்” எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தபோது, “ஒரு படத்தை எடுப்பதற்குள் இயக்குநர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தால்தான் புரியும்.
அதற்குள் பல சவால்கள் இருக்கும், இதில் ஏன் என்னைச் சேர்க்கவில்லை என்று கேட்பது சரியாக இருக்காது. இப்போது கார்த்திக் சுப்பராஜ் எடுத்துக் கொண்டால், `பேட்ட’ படத்தில் அனிருத் உடன் பணியாற்றினார். அதன் பிறகு `மகான்’ படத்தை அனிருத் உடன்தான் துவங்கினார். அறிவிக்கும்போது அனிருத்தான் அந்தப் படத்தில் இருந்தார். பின்னர் நான் பணியாற்றினேன். ’கடைசி விவசாயி’ படம் இளையராஜா சாருடன் துவங்கினார்கள். அதன்பின்பு நான் பணியாற்றினேன். இதுபோன்ற விஷயங்கள் நிறைய நடக்கும். இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்துக்கு இளையராஜா சார்தான் இசை. பயங்கரமாக வேற லெவலில் வந்து கொண்டிருக்கிறது. Ennio Morricone – Quentin Tarantino கூட்டணியின் படத்தைப் பார்த்தால் ஓர் உணர்வு வருமே, அப்படி இருந்தது” என்றார்.
