திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின் பேரிலேயே திருநாவுக்கரசு இளையராஜாவை தொடர்புகொண்டது தெரியவந்துள்ளதாக காவல்துறையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தவெக தனிபெருங்கட்சியாக வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத நிலையில், திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்த விசிக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் தவெகவின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றிருக்கிறார். இதற்கிடையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பேர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில், தவெக குதிரை பேரம் நடத்துகிறது எனவும் சோபா மாடல் ஆட்சி எனவும் எதிர்க்கஎட்சியான திமுக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.
இந்தசூழலில் தான், தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவின் ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜா, சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவிருப்பதாக கூறி சிலர் தன்னிடம் 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக சென்னை மாநகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னையை சேர்ந்த தியாகராஜன் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், காவல்துறையின் விசாரணையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின் பேரில் இவர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் தான், இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள அமைச்சர் நிர்மல்குமார், ”ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் உத்தரவின் பேரில் செந்தில்பாலாஜி போன்ற ஆட்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் எம்.எல்.ஏக்களைத் தொடர்பு கொண்டு பல கோடிகளைத் தருவதாக பேசுகின்றனர் இன்று ஒரு எம்.எல்.ஏவின் புகாரின் பேரில் குதிரை பேரம் பேசியவர்களைக் காவல்துறை கைது செய்திருக்கிறது; இதனால்தான் ஸ்டாலின் 30 நாட்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடுமென சொல்கிறார். இதுபோன்ற கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திரு. ஸ்டாலின் தயவு செய்து அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள்; கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த கெடுதலுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள்; முதலமைச்சராக இருந்தவர் இதற்கு முன் தோற்றிருக்கிறாரா? இது மக்கள் உங்களுக்குக் கொடுத்த பாடம்; இதற்குமேலாவது திருந்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தவெக எம்.எல்.ஏ-க்களை 20 பேரை ராஜினாமா செய்ய வைக்கவும், இதன் மூலம் தவெகவின் ஆட்சியை கவிழ்க்க சதி நடந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
