சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் குறித்து முதல்வர் விஜய் பேசியதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், நேற்று சட்டசபையில் மீண்டும் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார். அதற்கு, பல்வேறு அமைச்சர்கள் பதிலளித்தனர். தொடர்ந்து இதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது திமுக குறித்து கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும், அவரது கொளத்தூர் தொகுதி தோல்வி குறித்தும் விமர்சித்திருந்தார். இதற்கிடையே, முதல்வரின் உரையால் திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்திருந்தனர். இதுதொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றியுள்ளார் முதல்வர் விஜய். டயலாக்கை மனப்பாடம் செய்துவிட்டு போவதுபோல், அனைத்தையும் ஒப்பித்துவிட்டுச் சென்றுள்ளார். ரீல்ஸை மனதில்வைத்தே முதல்வர் விஜய்க்கு ஸ்கிரிப்ட் தரப்படுகிறது” என்றார்.
அதனைத் தொடர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் பேரவை உரைக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் அந்தப் பக்கத்தில், ”சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர். பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக்கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத் தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.

முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் – பஞ்ச் டயலாக்கும் மட்டும்தான் இருந்ததே தவிர, மின்வெட்டு – விவசாயிகள் பிரச்னை – மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு – வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்தப் பதிலும் இல்லை. எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்தது கண்டிக்கத்தக்கது. குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்துகொள்ள வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
