கடந்த ஒன்றரை ஆண்டுகளில், சுமார் 30 பச்சிளங்குழந்தைகள் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிறந்த குழந்தைகளை 10 லட்சம் ரூபாய் வரை சட்டவிரோதமாக விற்பனை செய்துவந்த மாநிலங்களுக்கு இடையேயான குழந்தை கடத்தல் கும்பலை டெல்லி போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஏழை பெற்றோரின் குழந்தைகளை குழந்தைப்பேறு இல்லாத பணக்கார பெற்றோர்களுக்கு விற்பதுதான் கடத்தல் கும்பலின் குறிக்கோளாக உள்ளதென சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில், டெல்லியில்‘பச்சிளம் குழந்தைகள் விற்பனை’ அதிகளவில் நடப்பதாக தொடர்ந்து செய்திகள் எழுந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில், சுமார் 30 பச்சிளங்குழந்தைகள் 10 லட்சம் ரூபாய் வரை விலைக்குப் பல மாநிலங்களில் விற்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மாநிலங்களுக்கு இடையேயான குழந்தை கடத்தல் கும்பலை டெல்லி காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

பச்சிளம் குழந்தை
மத்திய டெல்லியின் பகார்கஞ்ச் பகுதியில் பெண் ஒருவர், அடுத்தடுத்த வாரங்களில் வெவ்வேறு குழந்தைகளை கையில் வைத்திருப்பதைக் கவனித்த சமூக ஆர்வலர் ஒருவர் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், குழந்தையை வாங்குவதுபோல ரகசிய வாடிக்கையாளர்களாக வேடமிட்டு அந்த கும்பலை அணுகினர். அப்போது ஒரு குழந்தையை ரூ.5 லட்சத்திற்கு விற்க அந்த கும்பல் சம்மதித்து, அட்வான்ஸ் பணமும் வாங்கியது. அதன்பிறகு, குழந்தையை ஒப்படைக்க வந்தபோது, போலீஸார் அவர்களை கையும் களவுமாகப் பிடித்தனர்.
விசாரணையில், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் பழங்குடியினர் பகுதிகள் உள்ளிட்ட பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களிடமிருந்து பச்சிளங்குழந்தைகள் எடுக்கப்பட்டு, டெல்லி, ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். குழந்தையை வாங்கும் தம்பதியினருக்குச் சந்தேகம் வராமல் இருக்க, தனியார் மருத்துவமனை ஒன்றின் மூலம் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, குழந்தைகள் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரையிலான குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு, பின்னர் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விற்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணையில், கடத்தல்காரர்கள், இடைத்தரகர்கள், வாங்குபவர்கள் மற்றும் ஒரு தனியார் மருத்துவமனை உரிமையாளர் உட்பட இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதேநேரத்தில் ஐந்து பச்சிளங்குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இந்தக் கும்பலால் விற்கப்பட்டதாகக் கூறப்படும் மற்ற பச்சிளங்குழந்தைகளை அடையாளம் காணவும் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
