8 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. ஒரு மேயர் இடத்தையாவது திமுக வென்று காட்டட்டும் என ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்திருந்த நிலையில், அதற்கு முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பதிலடி கொடுத்திருக்கிறார்.
சென்னை புளியந்தோப்பில் உள்ள உருது நடுநிலைப்பள்ளி கட்டடத் திறப்பு விழா நேற்று முன்தினம் (ஜூன் 4) நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரு.வி.க. நகர் தவெக எம்.எல்.ஏ. பல்லவி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் குத்து விளக்கு ஏற்றும் நிகழ்வின் போது, மெழுகுவர்த்தியைக் கேட்டும் மேயர் பிரியா தராததால் எம்.எல்.ஏ. பல்லவி அங்கிருந்து அதிருப்தியுடன் வெளியேறியிருந்தார். இதுதொடர்பான காணொளி வெளியாகியிருந்த நிலையில், எம்.எல்.ஏ. பல்லவி அவமானப்படுத்தப்பட்டதாக, தவெகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்தசூழலில் தான், சென்னை ஆர்.கே. நகரில் நேற்று தவெகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜுனா, ”நாங்கள் இதுவரை அரசு விழாக்களில், கட்சியை பார்த்தது கிடையாது. ஆனால், மேயர் பிரியா, நமது சகோதரி பல்லவியை, ஒரு மெழுகுவர்த்தியை கூட கொடுக்காமல் அவமானப்படுத்தியிருக்கிறார். இப்போது, உதயநிதிக்கு நேருக்கு நேர் ஒரு சவால் விடுகிறேன். இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வர விருக்கிறது. 75 வருட திமுகவாக இருந்தால், 25-ல் 1 மேயர் இடத்தையாவது வென்று காட்டுங்கள். எங்களுடைய பல்லவி சகோதரி எப்போது அவமானப்படுத்தப்பட்டார்களோ, அப்போதே நாங்கள் தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டோம்” என சவால் விடுத்திருந்தார்.
இந்தசூழலில் தான், அமைச்சர் ஆதவ் பேசியதற்கு திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்திருக்கிறார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், கே.என். நேரு, சேகர்பாபு எம்.எல்.ஏ., மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கே.என். நேரு, ”பொதுக் கூட்டத்தில் நான் அதிகம் பேசுவது இல்லை.

கே.என்.நேரு
திமுக தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நடுத்தர மக்களுக்கு உழைக்கும் இயக்கம். 8 மாத காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது. உங்களால் முடியுமா? என்பவர்கள் மத்தியில், முடியும் என்று நிரூபிக்கும் வகையில் இந்த கூட்டம் அமைந்திருக்கிறது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் புதியவர்கள் ( தவெக) யாரும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. மீண்டும் திமுக தான் வரும்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
