சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2026 தொடரில், சூர்யகுமார் யாதவ் 13 இன்னிங்ஸ்களில் 270 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதேநேரத்தில், இந்த ரேஸில் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோரும் போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய டி20 அணியின் கேப்டனாக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். 2024-ஆம் ஆண்டு டி20 கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பெரும் வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக 2025ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை மற்றும் 2026 டி20 உலகக் கோப்பை ஆகியவற்றைப் பெற்றுத் தந்தார். ஆயினும் இந்த வெற்றிகளுக்கு மத்தியில் அவரது பேட்டிங் குறித்து தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளிலும் அவர் தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2026 தொடரில், சூர்யகுமார் யாதவ் 13 இன்னிங்ஸ்களில் 270 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

சூர்யகுமார் யாதவ்
இந்த நிலையில்தான், அவரது ஃபார்ம் மற்றும் இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவிர, இந்திய அணியில் அவர் இடம்பிடிப்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.
அதேநேரத்தில், அவருக்குப் பதிலாக புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரேஸில் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோரும் போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மாற்றம், இந்த மாத இறுதியில் அயர்லாந்து அணிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட தொடரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்திய அணியின் தலைமை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கர், ஸ்ரேயாஸை நீண்டநாட்களாக இந்தப் பொறுப்பிற்கு ஆதரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரேயாஸ் ஐயர்
ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பை ஏற்கும்பட்சத்தில், திலக் மற்றும் இஷான் ஆகியோரில் ஒருவர் இந்தியாவின் துணை கேப்டனாக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இதுதொடரபான எந்த அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் வராத நிலையில், டி20 கேப்டன் நியமனம் தொடர்பாக தேர்வுக் குழு, பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகம், பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் ஆலோசனை செய்து விரைவில் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.
