அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தபிறகு மக்களும் அரசியலுக்குள் வந்துவிட்டார்கள். சட்டசபையில் ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பதனால் தொடர்ந்து பார்க்கிறோம்.
கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் வருடந்தோறும் நடக்கும் ஹைக்கூ கவிதைப் போட்டியை திரைப்பட இயக்குநர் லிங்குசாமி நடத்தி வருகிறார். தொடர்ந்து 5-ஆம் ஆண்டாக இந்தாண்டும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பேசிய லிங்குசாமி, “எங்களுக்குச் சந்தோஷமான பெருமையான மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் எங்களுடைய நண்பர், இரண்டு வருடங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய, எங்களோடு தொடர்ந்து பயணித்த ராஜ்மோகன் அமைச்சராகி இருப்பது. இதற்கு முழுத் தகுதி வாய்ந்தவர் அவர். விஜய் சார் வெற்றி பெறுவார் என்பது 10 நாட்களுக்கு முன் தெரிய துவங்கிவிட்டது.
எங்கள் வீட்டில் பணியாற்றும் நபர்கள் எல்லோரும், ’வாக்களிக்க ஊருக்குச் செல்ல வேண்டும்; எங்க வீட்டு குட்டி பசங்க எல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போடணும்னு சொல்றாங்க’ என்றார்கள். பிறகு, எங்கள் வீட்டுக்கு முடி வெட்டுவதற்கு ஒரு தம்பி வருவார். தேர்தல் முடிந்த பின்னர் அவரிடம் ‘ஓட்டு போட்டுட்டீங்களா’ என்று கேட்டேன். அவர், ‘போட்டேன் சார். எப்பவும் எங்க வீட்டுல 12 ஓட்டு. வழக்கமாக திமுகவுக்குத்தான் ஓட்டு போடுவோம். ஆனா, இந்த முறை எங்க வீட்ல 8 பேர் தவெகவுக்குப் போட்டோம்’ என்று சொன்னார். பிறகு எங்க வீட்டுக்கு வந்த பிளம்பர்ல தொடங்கி நிறைய பேர் என்னிடம் தவெகவுக்குத்தான் ஓட்டு போட்டதாகச் சொன்னார்கள். ‘எல்லோரும் தவெகவுக்குதான் ஓட்டு போட்டேன்னு சொல்றாங்களே’ என அவர்கள் சொன்ன அப்போதே ஏதோ நடக்கப் போகுது என்று தோன்றியது. இன்று இவ்வளவு பெரிய மேஜிக் நடந்திருக்கிறது.
அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தபிறகு மக்களும் அரசியலுக்குள் வந்துவிட்டார்கள். சட்டசபையில ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பதனால் தொடர்ந்து பார்க்கிறோம். அதுவும் இப்போது மதிப்புமிக்க ஃபுட்டேஜ்-ஆக மாறிடுச்சு” என்றவர், “தயாரிப்பாளர் சௌத்ரி சார் மறைவின்போது அவருக்கு அஞ்சலி செலுத்த விஜய் சார் வந்திருந்தார். போகும்போது அவர் காரில் ஏறிவிட்டார். அப்போது என்னைப் பார்த்தவர் மறுபடியும் வெளியே இறங்கி வந்து எனக்குக் கைகொடுத்துப் பேசினார். காரிலிருந்தே கண்ணாடி வழியாகவே எனக்கு அவர் கை காட்டியிருக்கலாம். ஆனால், இறங்கி வந்து பேசினார். அப்போ நான் அவரிடம் ‘இது பெரிய நிகழ்வு’ என வாழ்த்து சொன்னேன். அவரும், ‘ரொம்ப சந்தோஷம்ணா, வீட்டுல மீட் பண்ணுவோம்’ என்று சொல்லி கிளம்பிவிட்டார்.

N. Lingusamy Anjaan
அந்த இடத்துக்காக அவர் உழைத்திருக்கிறார். விஜய் சார் காலத்தோடு ரொம்பவே கனெக்டிவாக இருப்பார். ஷூட்டிங்கிற்குச் சொன்ன நேரத்திற்கு வந்து நிற்பார். அதனால்தான் காலம் அவங்களுக்கு இதைத் திரும்பக் கொடுத்திருக்கிறது” என்றார்.
