15 வயதில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் தன்மீது திரும்பியுள்ளார் புதிய சிக்ஸ் ஹிட்டிங் மெஷின் வைபவ் சூர்யவன்ஷி.
Summary
15 வயதிலேயே உலகின் தலைசிறந்த பவுலர்களை அச்சுறுத்தும் வைபவ் சூர்யவன்ஷியின் வெற்றியின் ரகசியத்தை சக வீரர் துருவ் ஜூரல் வெளிப்படுத்துகிறார். அவருக்கு எதிராக தாங்கள் வகுத்த அத்தனை வியூகங்களையும் சூர்யவன்ஷி உடைத்துவிட்டார் என்று SRH பயிற்சியாளர் பிராங்க்ளின் மிரண்டு போயுள்ளார்.
‘என்னடா பா வயசு உனக்கு.. தம்மாத்தூண்டு ஆங்கர் தான்.. அந்த பையனுக்கு பயம் கிடையாது..’ என்ற சினிமாவின் மாஸ் வசனங்களை எல்லாம் வைபவ் சூர்யவன்ஷிக்காகவே எழுதிவைத்துவிடலாம்.. என்னமா ஆடுறான் பா அந்த பையன் என்றும், சைலன்ஸ் ஆக்கிய கம்மின்ஸையே சைலன்ஸ் ஆக்கிட்டான், முத்துப்பாண்டியவே குத்திட்டான் பா என்று கிரிக்கெட் உலகமே ஆச்சரியப்பட்டு போயுள்ளது.

சூர்யவன்ஷி
வெறும் 15 வயது தான், இத்தனை வயதில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம், இந்த பையன் எப்படி உலகின் தலைசிறந்த பவுலர்களின் பந்தையெல்லாம் தலைக்கு மேல் சிக்சராக விளாசிக்கொண்டிருக்கிறார் என ஆச்சரியப்படாத ரசிகர்களே இல்லை. அத்தனையும் வெறும் குருட்டு அடி என்று சொல்லிவிட முடியாது, அனைத்தும் கிரிக்கெட் வல்லுநர்களே மெச்சிக்கொள்ளும் தரமான ஷாட்கள்.. ஸ்லோவர் பந்துகளை கணித்துவிடுகிறார், கட்டர், பவுன்சர், சொடுக்கு பந்துகள் என அனைத்தையும் அவரின் புத்திக்கூர்மை வென்றுவிடுகிறது.. 15 வயதில் எப்படி கிரிக்கெட்டில் ஊறிப்போன ஒரு முதிர்ச்சி இச்சிறுவனுக்கு கிடைத்தது.. வைபவ் சூர்யவன்ஷி ஒரு அதிசயமாகவே பலரின் கண்களுக்கு தெரிகிறார்.
இந்தசூழலில் தான் வைபவ் சூர்யவன்ஷின் வெற்றிக்கான தாரக மந்திரம் என்ன என்பதை துருவ் ஜூரல் வெளிப்படுத்தியுள்ளார்.
SRH அணிக்கு எதிராக 29 பந்தில் 97 ரன்கள் குவித்தபிறகு பல சாதனைகளை தன்பெயரில் எழுதினார் வைபவ் சூர்யவன்ஷி. ஒரு இளம் சூறாவளி அடித்துச்சென்ற பிரம்மிப்பில் கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க, சூர்யவன்ஷியின் சக்சஸ் ஃபார்முலா என்ன என்பதை சக வீரரான துருவ் ஜூரல் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய துருவ் ஜூரல், “பொதுவாக இளம் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மையத்திற்குச் செல்லும்போது, ’பந்துவீச்சாளரைப் பார்க்காதீர்கள், பந்தைப் பாருங்கள் என்று சொல்வது வழக்கம். ஆனால் ஒரு பெரிய பவுலர் வீசினால், அவர் யார், அவருக்கு எதிராக எப்படி விளையாடப்போகிறோம் என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கும். ஆனால் உண்மையில் சூர்யவன்ஷிக்கு அந்த கவலை இருந்ததே இல்லை, அவர் பந்தை மட்டுமே பார்ப்பார், பந்தை வீசுவது யார் என்பது எல்லாம் அவருக்கு தெரியாது.

சூர்யவன்ஷி
‘எந்தப் பந்துவீச்சாளரைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை’ என்பதுதான் அவருடைய தாரக மந்திரம்.
அவரைப் பற்றிய சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் தன்னை நம்புகிறார். ‘என்னால் இதைச் செய்ய முடியாது’ என்ற சிறு சந்தேகம் கூட அவருக்கு இல்லை. அதற்கேற்ற உழைப்பை அவர் பயிற்சியில் போடுகிறார்” என்று பேசியுள்ளார்.
அதே நேரத்தில் சூர்யவன்ஷிக்கு எதிராக பல திட்டங்களை வகுத்தபோதும் அவரை தங்களால் தடுத்து நிறுத்தவே முடியவில்லை என்று SRH அணியின் உதவி பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு எதிராக சிறந்த பந்துவீசுகளை வீசுவது என்பது சிறிய அளவிலேயே செய்ய முடிகிறது. முதலில் நாங்கள் அவருடைய பேட் ஸ்விங்கை கட்டுப்படுத்த லெக் ஸ்டம்பில் ஃபுல்லர் பந்தாக வீசினோம். ஆனால் அதை அவர் எளிதாக முறியடித்துவிட்டார். பின்னர் எப்போதும் இல்லாத ஃபீல்டிங் வியூகத்தை செயல்படுத்தினோம், அவரால் ஃபீல்டருக்கு மேல் சிரமமின்றி அடிக்க முடிகிறது.

ஜேம்ஸ் ஃபிராங்க்ளின்
இதுபோன்ற ஒரு திறமையாளரை இதற்கு முன் யாரும் பார்த்ததில்லை என்று நான் நினைக்கிறேன். தற்போது அவர் செய்து கொண்டிருப்பது அபாரமானது. தற்போது தான் 15 வயது, அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் 25 ஆண்டுகள் மீதமிருக்கிறது என்று நினைக்கும்போதே மிகவும் அச்சமூட்டுகிறது. போகப்போக அவர் இன்னும் சிறந்த வீரராக மாறுவார், இன்னும் வலிமையாவார், அவருடைய பேட்டிங் இன்னும் பக்குவமடையும், தற்போது இருப்பதை விட மிகவும் ஆபத்தான வீரராக மாறுவார் என்று SRH அணியின் உதவி பயிற்சியாளர் பாராட்டி பேசியுள்ளார்.
பேபி மான்ஸ்டர் என புகழப்படும் சூர்யவன்ஷியை விரைவில் இந்திய அணியில் பார்க்க வேண்டும், சிறந்த ஃபார்மில் இருக்கும்போதே அவருடைய திறமையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எண்ணமாக இருந்துவருகிறது.
