தமிழ்நாடு முழுவதும் கோயில்கள், கல்வி நிறுவங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகளை 2 வாரங்களுக்குள் மூட தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவையின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நேற்றைய முன்தினம் (மே 10) பதவியேற்று கொண்டார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழா மேடையிலேயே, 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைத் திட்டம், போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கம் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார். நேற்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைத் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

விஜய்
இந்தசூழலில் தான், இன்று வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தவிட்டுள்ளார். இதுகுறித்தான, தமிழ்நாட்டு அரசின் செய்தி வெளியீட்டில், ”தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
அதில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு முதல்வர் விஜய் அவர்களால் உத்தரவிடப்பட்டது. மேற்படி, இந்த ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த 2 வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
