அதிகளவிலான சத்தத்துடன் உங்கள் அலைபேசியில் அதிர்வுடன் கூடிய மெசேஜ் வந்தால் யாரும் பயப்பட வேண்டாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
சுனாமி, பூகம்பம் மற்றும் புயல் போன்ற பேரிடர் காலங்களில், கோடிக்கணக்கான மொபைல் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், ‘SACHET’ என்ற ஒருங்கிணைந்த எச்சரிக்கை அமைப்பு மூலம் எச்சரிக்கைகள் மெசேஜ்கள் அனுப்பப்பட்டு இன்று சோதனை செய்யப்படவிருக்கிறது. இதன்மூலம், எதிர்காலத்தில் பேரிடர் நேரும்போது பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும், பொதுமக்களுக்கு துல்லியமான தகவல்களை அளிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மொபைல் போனில் எச்சரிக்கை ஒலி
இந்தசூழலில் தான், தமிழ்நாடு உட்பட நாட்டில் உள்ள மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள பெரும்பாலான மொபைல் போன்களுக்கு அதீத சத்தத்துடன் எச்சரிக்கை மெசேஜ்கள் அனுப்பி சோதிக்கப்படவுள்ளது. சோதனையின் போது, மொபைல் போன்களில் பொதுமக்கள் ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் “சோதனைச் செய்திகளை” பெறக்கூடும். எனவே, பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளவோ அல்லது இதுகுறித்தான நடவடிக்கையோ தேவையில்லை எனவும் புறக்கணி பொத்தானை மட்டும் அழுத்த வேண்டும் எனவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
