கேரளத்தின் சபரிமலைக் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான மனுக்களை விசாரித்தபோது, ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இந்தக் கருத்தை வெளியிட்டது.
Summary
சபரிமலை ஐயப்பன் கோயில் நுழைவு விவகாரத்தில், பெண்கள் 50 வயது வரை காத்திருப்பார்கள் என்ற உச்சநீதிமன்றக் கருத்து சர்ச்சை கிளப்பியது. பெண்கள் நுழைந்த பின் சுத்திகரிப்பு சடங்கு தீண்டாமை என இந்திரா ஜெய்சிங் வாதித்தார். வரலாற்று ஆதாரங்கள், தனிப்பட்ட அனுபவங்கள் மூலம் பெண்கள் மீதான பாகுபாட்டை சுட்டிக்காட்டிய அவர், குழுவின் மத உரிமைக்காக தனிநபர் அடிப்படை உரிமைகளை தியாகம் செய்ய முடியாது என்றார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தொடர்பான வழக்கானது பத்தாவது நாளாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று (ஏப்ரல் 30) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது “ஐயப்பன் மீது உண்மையான பக்தி கொண்ட பெண்கள், 50 வயது அடையும் வரை காத்திருப்பார்கள், அதுவரை அவர்கள் கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள்” என்று வாய்மொழியாகக் கருத்துத் தெரிவித்தது உச்சநீதிமன்றம். மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் முன்வைத்த வாதங்களுக்குப் பதிலளிக்கையில் நீதிபதிகள் இந்தக் கருத்தைக் கூறியுள்ளனர்.

Women Devotees
2018ஆம் ஆண்டு தீர்ப்பிற்குப் பிறகு சபரிமலைக்குள் நுழைந்த பிந்து உள்ளிட்ட இரு பெண்களுக்காக ஆஜரான இந்திரா ஜெய்சிங், “பெண்கள் நுழைந்த பிறகு அங்கு சுத்திகரிப்பு சடங்கு செய்யப்பட்டது. இது அரசியலமைப்புச் சட்டம் 17-ன் கீழ் தடை செய்யப்பட்ட ‘தீண்டாமை’யாகும். மாதவிடாயை அசுத்தமாகக் கருதுவது மனித உரிமைகளுக்கு எதிரானது” என்று வாதிட்டார்.
பிந்து என்ற பெண் தனது 40-வது வயதில் கோவிலுக்குச் சென்றதைக் குறிப்பிட்ட நீதிபதி நாகரத்னா, “அவர் 10 வயது முதல் 50 வயது வரை இடையில் என்ன செய்தார்? உண்மையான பக்தராக இருந்தால் ஏன் முன்பே செல்ல முயலவில்லை? தீர்ப்பு வந்தவுடன் மட்டும் திடீரெனச் செல்ல முடிவெடுத்தது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.

devotees of Ayyappan
இதற்குப் பதிலளித்த இந்திரா ஜெய்சிங், “அவர் ஒரு சட்ட ஆசிரியராக இருந்தார். நீதிமன்றத் தீர்ப்பின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையிலும், மனசாட்சியின் படி சுயபரிசோதனை செய்துகொள்ளவுமே அங்கு சென்றார்” என்றார்.
நீதிபதி நாகரத்னா மேலும் கூறுகையில், “உண்மையான பெண் பக்தர்கள் 50 வயது வரை வீட்டிலேயே இருப்பார்கள். இந்து மதத்தில் பிறப்பு மற்றும் இறப்பிற்குப் பிறகு சில காலம் தீட்டுக் காக்கும் முறை உள்ளது. நாளை யாராவது அந்த காலத்திலும் கோவிலுக்குச் செல்ல உரிமை கோரி மனு தாக்கல் செய்வார்களா?” என்று வினவினார். பெண்கள் சபரிமலைக்குச் செல்லக் கூடாது என்பதற்கு வரலாற்று ரீதியான ஆதாரம் எதுவுமில்லை என்று இந்திரா ஜெய்சிங் வாதிட்டார்.

sabarimala temple
திருவிதாங்கூர் மகாராணி தனது குழந்தைக்குச் சோறு ஊட்டும் சடங்கிற்காக 50 வயதிற்கு முன்பே கோவிலுக்குச் சென்றதற்கான ஆவணங்கள் தந்திரியின் பிரமாணப் பத்திரத்திலேயே இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், தனது குடும்பத்திலேயே மாதவிடாய் காலத்தில் நிலவிய பாகுபாடுகள் குறித்துத் தனது தனிப்பட்ட வேதனைகளையும் அவர் பதிவு செய்தார்.மதம் மற்றும் தனிநபர் உரிமைகள் குறித்து வாதிட்ட இந்திரா ஜெய்சிங், ஒரு குழுவின் உரிமைகளுக்காகத் தனிநபரின் அடிப்படை உரிமைகளைத் தியாகம் செய்ய முடியாது என்றும், பொதுமக்களின் ஒழுக்கம் என்பதை விட அரசியலமைப்பின் அறநெறியே முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.
