IRGC எனப்படும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையே அனைத்து முடிவுகளை எடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை, அமெரிக்காவும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியிருந்தது.
ஈரானின் ராணுவ அமைப்பான இஸ்லாமிய புரட்சிப் படைக்கும், அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுக்கும் இடையே மோதல் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், விரைவில், இஸ்லாமிய புரட்சிப் படை அங்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்ற போர், இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அது இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் தேதி குறிப்பிடப்படாமல் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் முற்றுகை தொடரும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறிப்பாக, போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதற்குக் காரணம், ஈரான் அரசாங்கம் கடுமையாகப் பிளவுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஈரானின் ராணுவமான இஸ்ரேலிய புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்கும், அதிபர் மசூத் பெஷெஷ்கியனுக்கும் இடையில் சமீபகாலமாக முட்டல் மோதல் தொடங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மொஜ்தபா காமேனி
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா – இஸ்ரேலிய தாக்குதலில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவராக இருந்த அலி கமேனி மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமெனி உச்சபட்ச தலைவர் பதவியை ஏற்றதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அவர் இன்னும் பொதுவெளியில் தோன்றவில்லை. இது, அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில், அலி கமேனி இறந்த அன்றே, இவரும் தாக்கப்பட்டதாகவும், கடுமையான காயம் காரணமாக அவர் கோமா நிலைக்குச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆயினும், அவர் மருத்துவமனையில் இருந்தே காணொளி வாயிலாக அரசு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சில ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் IRGC எனப்படும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையே அனைத்து முடிவுகளை எடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை, அமெரிக்காவும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை அந்நாட்டின் அரசியல் அமைப்பின் மீதான தனது பிடியை இறுக்கி வருவதாகத் தெரிகிறது. ஃபாக்ஸ் நியூஸ் மேற்கோள் காட்டிய ஓர் அறிக்கையின்படி, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை, முக்கிய ஜனாதிபதி நியமனங்களைத் தடுத்து வருவதாகவும், நாட்டின் உயர்மட்டத் தலைவர்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தையும் அமைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

IRGC Majid Saeedi
ஈரான் இன்டர்நேஷனல் அமைப்பின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கை, முக்கிய அரசுப் பணிகளைக் கட்டுப்படுத்த ஐ.ஆர்.ஜி.சி திறம்பட தலையிட்டுள்ளதாகக் கூறுகிறது. அந்த அறிக்கையின்படி, IRGC தளபதி அஹ்மத் வாஹிதியின் அழுத்தத்தைத் தொடர்ந்து, புதிய உளவுத்துறை அமைச்சரை நியமிப்பதற்கான அதிபர் மசூத் பெஷெஷ்கியன் முயற்சி தோல்வியடைந்ததாகவும், முன்மொழியப்பட்ட அனைத்து நபர்களும் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது, அதிகரித்து வரும் உள்நாட்டுப் பதற்றங்களுக்குப் பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. தவிர, இந்த நிகழ்வுகள் பின்னாளில் ஒரு திடீர் அதிகாரக் கைப்பற்றலாக மாறக்கூடும் எனவும், இது ஈரானின் அதிகாரக் கட்டமைப்பில் ஏற்படும் ஒரு படிப்படியான மாற்றத்தின் ஒரு பகுதி எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 1979 புரட்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.ஜி.சி, ஈரானின் இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகள் முழுவதும் தனது செல்வாக்கை சீராக விரிவுபடுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், ஈரான் பிளவுபட்டு இருக்கிறது என அதிபர் ட்ரம்ப் சொன்ன கூற்று, உண்மையாக இருக்குமோ என அலசப்படுகிறது.
