நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதிகள் மறுவரையறை மசோதா இன்று கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மக்களவைக்கு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 815 பேருக்கு மிகாமலும், யூனியன் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 35 பேருக்கு மிகாமலும் இருப்பார்கள் என்று இந்த மசோதா தெளிவுபடுத்துகிறது.
தொகுதிகள் மறுவரையறை மசோதா
மக்கள்தொகை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுபரிசீலனை செய்வதே இந்த மசோதாவாகும். குறிப்பாக, இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்கள் எண்ணிக்கையை சமமாக இருக்கச் செய்வதாகும். இந்த செயல்முறை பொதுவாக மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, மக்களவைத் தொகுதி எண்ணிக்கை 543இல் இருந்து 850ஆக அதிகரிக்கிறது. மக்களவைக்கு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 815 பேருக்கு மிகாமலும், யூனியன் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 35 பேருக்கு மிகாமலும் இருப்பார்கள் என்று இந்த மசோதா தெளிவுபடுத்துகிறது. அதாவது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் சமமாக 50 விழுக்காடு அதிகரிக்கப்படும். இறுதி எண்ணிக்கை தொகுதி மறுவரையறை நடைமுறையின் மூலம் தீர்மானிக்கப்படும். இந்தத் தொகுதிகளைப் பிரிக்கும் பணியை ஒரு சக்திவாய்ந்த ‘மறுவரையறை ஆணையம்’ மேற்கொள்ளும்.

மக்களவை
இந்தியாவில் கடைசியாக முழுமையான தொகுதி மறுவரையறை 2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. தற்போது, 2026க்கு பிறகு மீண்டும் மறுவரையறை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 39இல் இருந்து 59ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை 80லிருந்து 120ஆக உயர உள்ளது. தற்போது தமிழ்நாட்டுக்கும் உத்தரப்பிரதேசத்துக்கும் உள்ள மக்களவைத் தொகுதி வித்தியாசம் 41ஆக உள்ளது. ஆனால் தொகுதி மறுவரையறைக்கு பின்னர் இவ்விரு மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதி வித்தியாசம் 61ஆக அதிகரிக்கும்.
இதற்கிடையே, மசோதாவில் தொகுதி மறுவரையறைக்கு 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையாகக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான விகிதத்தில் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று மசோதாவில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மக்களவை
2011 மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்வது பிராந்தியங்களுக்கிடையே கடுமையான சமமின்மை உருவாக்கும் என தென் மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் விமர்சித்துவருகின்றனர். மக்களவையில் உத்தரப்பிரதேசம், பிஹார். மத்தியப் பிரதேசம். ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களின் மொத்த இடங்கள் 207லிருந்து 366-ஆக அதிகரிக்கும். இதன்மூலம் மக்களவையில் இந்த மாநிலங்களின் பங்கு 38.1 விழுக்காட்டிலிருந்து 43.1 விழுக்காடாக உயரும். ஆனால், மக்கள்தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் இடங்கள் 132-லிருந்து 176-ஆக மட்டுமே உயரும்; இதனால் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் ஒட்டுமொத்தப் பங்கு 24.3 விழுக்காட்டிலிருந்து 20.7 விழுக்காடாகச் சரியும். இதனால் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி கல்வி மற்றும் சுகாதாரத்தில் முன்னேறிய மாநிலங்கள் தங்களின் ஜனநாயக அதிகாரத்தை இழப்பதோடு, நிதிப் பகிர்விலும் பாதிப்பைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
