எஸ்.ஜே.சூர்யா சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்ற ஆசைப்பட்டேன். ’சாரை பார்க்க வேண்டும்’ எனச் சொன்னேன். ’பார்க்க முடியாது’ எனச் சொன்னார்கள், நான் அங்கிருந்து கிளம்பாமல் எதிரில் இருந்த படிக்கட்டில் அமர்ந்தேன்.
பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் `LIK’. ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய பிரதீப் ரங்கநாதன், “நான் கல்லூரி படித்த சமயத்தில் எனக்கு ஒரு கேர்ள் ஃபிரெண்டு இருந்தார். அவள், பெங்களூரு என்பதால் அவளைப் பார்க்க அங்கு சென்றபோது நானும் அவளும் சேர்ந்து ஒரு படத்திற்குச் சென்றோம். அந்தப் படம் `நானும் ரௌடிதான்’. அப்போது இருந்து எனக்குப் பிடித்த இயக்குநராக விக்னேஷ் சிவன் மாறிவிட்டார்.

Vignesh Shivan
`லவ் டுடே’ முடித்தபிறகு விக்கி சாரிடம் இருந்து ஒரு போன் வந்தது. ’ஒரு கதை இருக்கிறது கேட்கிறீர்களா’ என்றார். நான் பார்த்து ரசித்த ஓர் இயக்குநர் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வரும் என நினைத்தே பார்க்கவில்லை. இந்தக் கதை எதிர்காலத்தில் நடப்பது எனச் சொன்னதும் எனக்கு மகிழ்ச்சி. அப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என நானும் கதை எழுதிக் கொண்டிருந்தேன். இதில் ’எனக்கென யாருமில்லையே’ பாடல் இருக்கிறது என்றதும் மூன்றாவது ஆச்சர்யம். அது என்னுடைய காதலிக்காக நான் பாடிக் காட்டிய பாடல் அது. அந்தப் பாட்டுக்கு நம்ம ஹீரோவா என்றதும் இந்தப் படத்தில் நடிப்பது என முடிவு செய்துவிட்டேன்.
நான் கல்லூரியில் படித்து முடித்தபிறகு, எஸ்.ஜே.சூர்யா சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்ற ஆசைப்பட்டேன். நுங்கம்பாக்கத்தில் அவர் வீட்டுக்குச் சென்று என்னுடைய ரெஸ்யூமை கொடுத்து, ’சாரைப் பார்க்க வேண்டும்’ எனச் சொன்னேன். ’பார்க்க முடியாது’ எனச் சொன்னார்கள், நான் அங்கிருந்து கிளம்பாமல் எதிரில் இருந்த படிக்கட்டில் அமர்ந்தேன். அப்போது எஸ்.ஜே.சூர்யா சாரை பார்க்க யூதன் பாலாஜி வந்தார், இருவரும் சாப்பிடும்போது வாசலில் அமர்ந்திருந்த என்னை, எஸ்.ஜே.சூர்யா சார் பார்த்து அழைத்தார்.

LIK
அப்போது கார்த்திக் சுப்பாராஜ் சார் இறைவியின் எஸ்ஜேசூர்யா நடித்துக் கொண்டிருந்தார். நான் எடுத்த ஒரு குறும்படம் அவரின் ’அவியல்’ படத்தில் வெளியாகி இருந்தது. அதைச் சொன்னதும், ’இயக்குநரா நீங்கள்’ என மதித்துப் பேசினார். ’தமிழ் டைப்பிங் தெரியுமா, புத்தகம் படிப்பாயா? வெளிநாட்டு சினிமா தொடர்ந்து பார்ப்பாயா’ எனக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். நான் எல்லாமே ’இல்லை’ என்றுதான் சொன்னேன். ’வெளிநாட்டிலிருந்து வரும் கேமரா மட்டும் பயன்படுத்துகிறீர்கள், அங்கிருந்து கற்றுக் கொள்ள மட்டும் என்ன பிரச்னை’ என்று கேட்டார். ’போய் கற்றுக்கொள்ளுங்கள்’ என்றார். படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். நிறைய கற்றுக் கொண்டேன்.
பிறகு வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படம் கமிட் ஆனேன். ஹீரோ மட்டும் பிடிக்கச் சொன்னார்கள். என்னுடைய சீனியர் அஷ்வத் மூலமாக, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தில் படம் கமிட் ஆன ஸ்ரீ கார்த்திக் பிடித்து, அவரின் வழியாக அதே தயாரிப்பு நிறுவனத்தில் ’மான்ஸ்டர்’ படம் நடித்துக் கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யாவை சந்தித்தேன். ’உடனடியாக கதை கேட்க முடியாது’ எனச் சொல்லி அவரது நம்பரை கொடுத்துவிட்டுப் போனார் எஸ்.ஜே.சூர்யா சார்.

Pradeep Ranganathan LIK
சில நாள் கழித்து அவரே என்னை கதை சொல்ல அழைத்தார். ஆனால், எனக்கு உடல்நிலை சரி இல்லாததால் நிலைமையைக் கூறினேன். மீண்டும் சில நாள் கழித்து ’உடல் சரியாகிவிட்டதா’ என விசாரித்து மறுபடி அழைத்தார். கதையைச் சொன்னேன். கேட்டுவிட்டு, ’அதில் இன்னும் என்னென்ன வேண்டும்’ எனச் சொன்னார். ’நீங்கள் நன்றாக கதை சொல்கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள். உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது’ என்றார். அது எனக்கு நிராகரிப்புதான். ஆனால் அவர் என்னைப் பாராட்டியதை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு உழைத்தேன். இப்போது அவரும் நானும் இணைந்து நடித்துள்ளோம் என்பதை நினைக்கையில் ’என்னா வாழ்க்கைடா’ என்று உள்ளது. பறவை பறக்கும்போது விதைகளைத் தூவி காட்டை உருவாக்குவதுபோல, நிறைய மனிதர்கள் அவர்களுக்கே தெரியாமல், அவர்கள் செய்யும் சில விஷயங்களால் மற்றவர்கள் வாழ்க்கையில் நல்லது செய்கிறார்கள். அப்படி என் வாழ்க்கையில் நல்லது செய்தவர்கள் இவர்கள் அனைவரும்” என்றார்.
