ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நாலுநாள் தூங்கமால் இருந்து, ஒரு சனிக்கிழமை என்னுடன் பணியாற்றுபவர்களுக்கு மதியம் விடுமுறை விட்டு, அரை நாள் சம்பளத்தையும் கொடுத்து அந்த எட்டுப் பேரையும், அந்தப் படத்துக்கு அழைத்துச் சென்றேன். அந்த படம்தான் `காக்கா முட்டை’.
மணிகண்டன், அஜித்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரிஷா, வடிவேல் முருகன், பார்வதி, சிங்கம்புலி, முத்துக்குமார் எனப் பலரும் நடித்துள்ள சீரிஸ் `முத்து என்கிற காட்டான்’. இந்த சீரிஸ் நாளை ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், நேற்று இரவு இதன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய வடிவேல் முருகன், “எனக்கு 7 வயதிலிருந்தே சினிமா மீது பைத்தியம். எவ்வளவு பைத்தியம் என்றால் படத்தைப் பார்த்துவிட்டு, பள்ளியில் சென்று நான் பார்த்த படத்தின் கதையை படம் பார்க்காத நண்பர்களிடம் கூறுவேன். பின்னர் 15 வயதில் படிப்பை நிறுத்தவேண்டிய சூழல், வேலைக்குச் சென்றேன். அப்படி நான் சம்பாதித்து படம் பார்த்த காலம் துவங்கியது. அந்தச் சமயத்தில் எப்போதோ ஒருமுறை மட்டும் படம் பார்க்கும் நபர்களை அழைத்துச் சென்று நான் பார்த்து வியக்கும் படங்களைப் பார்க்க வைப்பேன். இது 27 வயது வரை தொடர்ந்தது.
பின்னர் கட்டடத் துறையில் வளர்ந்த பிறகு, வரக்கூடிய எல்லாப் படங்களையும் பார்த்துவிடுவேன். என்னைப் பாதிக்கும் படம், ரஜினிகாந்த் நடிக்கும் படம் எல்லாவற்றுக்கும் படம் பார்க்க முடியாத சூழலில் இருப்பவர்களைக் கூட்டிச் செல்வேன். நான் ஒரு கான்ட்ராக்டர் ஆன பிறகு, ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நாலுநாள் தூங்கமால் இருந்து, ஒரு சனிக்கிழமை என்னுடன் பணியாற்றுபவர்களுக்கு மதியம் விடுமுறைவிட்டு, அரைநாள் சம்பளத்தையும் கொடுத்து அந்த எட்டுப் பேரையும், அந்தப் படத்திற்கு அழைத்துச் சென்றேன். அந்த படம்தான் `காக்கா முட்டை’. அப்படி நான் ஆச்சர்யப்பட்டு பார்த்த மணிகண்டன் சார் இயக்கத்தில் இப்போது நடித்திருக்கிறேன், அது வெளியாகிறது என்பதை இன்னும் நம்ப முடியவில்லை.
இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்குக் கொடுத்த மணிகண்டன் சாருக்கு பெரிய நன்றி. என்னை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்கள் எனத் தெரிந்ததும், அதற்குச் சம்மதம் சொன்ன விஜய் சேதுபதி அண்ணனுக்கு நன்றி. அவர் நினைத்திருந்தால் என்னை மாற்றச் சொல்லி இருக்கலாம். இதற்குப் பிறகு இதனை அங்கீகரித்த ஹாட்ஸ்டார் குழுவுக்கும் நன்றி. வாழ்க்கையில் நாம் பலரை கடந்துபோவோம். ஆனால் சிலரைத்தான் குருவாக ஏற்போம். அப்படி எனக்கு குருவாக இருக்கும் மணிகண்டன் சாருக்கு நன்றி.

Vadivel Murugan Kaataan
விஜய் சேதுபதி அண்ணன் இவ்வளவு பெரிய உயரத்துக்கு வரக் காரணம் அவரது குணம்தான். அவருடன் ஒரு 20 நிமிடங்கள்தான் பேசியிருப்பேன். அதில் 10 வருடத்துக்குத் தேவையான பாசிட்டிவிட்டியைக் கொடுத்துவிட்டார். இதில் எனக்கும் பார்வதிக்கும் ஜோடி எனச் சொல்வார்கள். ஆனால் எனக்கும் முத்துக்குமார் அண்ணனுக்கும்தான் ஜோடி. சிங்கம்புலி மாமா உடன் நடித்ததும் மறக்க முடியாது. எனக்கு ஜோடியாக நடிக சம்மதித்த பார்வதிக்கு நன்றி” என்றார்.
