அமெரிக்காவின் எஃப்-18 ரக போர் விமானத்தை (எஃப்/ஏ-18 ஹார்னெட்) வெற்றிகரமாகத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) தெரிவித்துள்ளது.
எஃப்-18 என்ற ரக விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகக் கூறினாலும், அது இரட்டை எஞ்சின் கொண்ட, விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து இயங்கக்கூடிய பல்திறன் போர் விமானமான எஃப்/ஏ-18 என்றே குறிப்பிட்டிருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க இராணுவம், எஃப்-18 என முறையாகப் பெயரிடப்பட்ட எந்த விமானத்தையும் இயக்குவதில்லை எனக் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் போர், ஒரு மாதத்தைத் தொட இருக்கும் நிலையில், அது மேலும்மேலும் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, சமீபகாலமாக ஈரானிடம் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், ஈரான் மறுத்துள்ளது. மறுபுறம், இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் செய்ய பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. அதன்படி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 15 அம்சத் திட்டங்கள் குறித்து வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதில் சில விஷயங்களைத் தவிர மற்றவைகளுக்கு ஈரான் தலையசைக்கவில்லை. இதற்கிடையே, ஈரான் எல்லையில் அமெரிக்க அரசு மேலும் படைகளைக் குவித்து வருகிறது. இது, வரும் காலங்களில் கடுமையான தாக்குதலுக்கு வழிவகுக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் எஃப்-18 ரக போர் விமானத்தை (எஃப்/ஏ-18 ஹார்னெட்) வெற்றிகரமாகத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) தெரிவித்துள்ளது. அதுகுறித்த வீடியோவையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அமெரிக்க விமானத்தைத் வெற்றிகரமாகத் தாக்கியதாக ஐ.ஆர்.ஜி.சி. கூறியபோதிலும், அதன் இருப்பிடம், சேதத்தின் அளவு அல்லது விமானியின் நிலை குறித்த விவரங்களை அது உடனடியாக வழங்கவில்லை. மறுபுறம், இந்தக் கூற்றை அமெரிக்காவும் மறுத்துள்ளது.
”ஈரானால் எந்த அமெரிக்கப் போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை” என அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
எஃப்-18 என்ற ரக விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகக் கூறினாலும், அது இரட்டை எஞ்சின் கொண்ட, விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து இயங்கக்கூடிய பல்திறன் போர் விமானமான எஃப்/ஏ-18 என்றே குறிப்பிட்டிருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க இராணுவம், எஃப்-18 என முறையாகப் பெயரிடப்பட்ட எந்த விமானத்தையும் இயக்குவதில்லை எனக் கூறப்படுகிறது. முன்னதாக, இதேபோன்று மார்ச் 5 அன்று, ஈரானின் தென்கிழக்கு எல்லைக்கு அருகே அமெரிக்காவின் F-15 ஸ்ட்ரைக் ஈகிள் ரக விமானம் ஒன்றை தங்களது வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக IRGC கூறியிருந்தது. தவிர, அதுதொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டிருந்தது.

ஆனால் அப்போதும், ஈரானியத் தாக்குதலால் எந்தவொரு அமெரிக்கப் போர் விமானமும் இழக்கப்படவில்லை என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை நோக்கி ஒரு குரூஸ் ஏவுகணையை ஏவியதாக ஈரான் கூறியிருந்தது. யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பல், தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், அது ஈரானிய எல்லையை நெருங்கினால் குறிவைக்கப்படலாம் என்றும் ஈரானிய கடற்படை அமெரிக்காவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்றதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்திருந்தது.
