பராசக்தி படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஏகப்பட்ட கட்டுகளையும், மியூட்டுகளையும் சொன்னார்கள்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா எனப் பலரும் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் `பராசக்தி’. சிவகார்த்திகேயனின் 25வது படம், இந்தி திணிப்பு எதிரான மொழிப் போராட்டத்தை மையமாக வைத்து உருவான படம் என இதன் மேல் பல எதிர்பார்ப்புகள் இருந்தன. இப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

Parasakthi
60களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையப்படுத்தி, கற்பனை கலந்து இப்படத்தை எடுத்திருந்தார் சுதா கொங்கரா. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ஏகப்பட்ட கட்டுகளையும், மியூட்டுகளையும் சொன்னார்கள். அவற்றில் முக்கியமானவை, ’படத்தில் தீ பரவட்டும்’ என்ற வார்த்தைக்கு பதிலாக, ’நீதி பரவட்டும்’ என்று மாற்றப்பட்டது.
மேலும், மொழியைத் திணிப்பதால் ஏற்படும் பிரிவினையை குறித்த பின்னணிக் குரல் மாற்றியமைக்கப்பட்டது. ’பராசக்தி’ படத்தில் இந்தி திணிப்பு தொடர்பாக சில குறிப்பிட்ட வசனங்கள் மற்றும் வாசகங்கள் மாற்றி அமைக்கப்பட்டன.
Anti National Scum என்ற வார்த்தை மியூட் செய்யப்பட்டது.
`இந்தி அரக்கி’ என்ற வார்த்தையும் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. ’இந்தி என் கனவை அழித்தது’ என்ற வசனம், ’இந்தி திணிப்பு என் கனவை அழித்தது’ என மாற்றப்பட்டது.
“எங்களை நீக்கிவிட்டு” என்பது முதல் “இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்” என்பது வரையிலான வசனம் நீக்கப்பட்டது.
இப்படியாக 25 திருத்தங்கள் தணிக்கை வாரியத்தால் நிகழ்த்தப்பட்டது. படக்குழு இந்த திருத்தம் எதுவும் இல்லாமல் கொண்டுவர முயன்றாலும், பட வெளியீட்டில் தாமதம் ஏற்படும் என்பதால், சென்சார் சொன்ன திருத்தங்களைச் செய்து, சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டனர். அதே சமயம், லண்டன் உள்ளிட்ட சில நாடுகளில் படம் இந்த திருத்தங்கள் இல்லாமல்தான் வெளியானது. திரையரங்க வெளியீட்டில் இப்படம் ஓரளவு பேசுபொருளானாலும், பரவலாக படம் பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை. விமர்சனத்தில் படம் பின்தங்கினாலும் வசூலில் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அறிவித்தது.

Parasakthi
இந்த சூழலில்தான் `பராசக்தி’ பிப்ரவரி 7ஆம் தேதி, ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. இது திரையரங்கில் வெளியான தணிக்கை செய்யப்பட பதிப்பு. இது வெளியான இரண்டே நாட்களில் ஒரு கோடி நிமிடங்கள் ஸ்ட்ரீமாகி சாதனையை படைத்திருக்கிறது. தற்போது மேலும் ஒரு சிறப்பாக படத்தின் UNCENSORED பாதிப்பு, அதாவது தணிக்கை செய்யப்படாத அசல் பாதிப்பு இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் படம் மீண்டு பேசுபொருளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
