பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் அமெரிக்காவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் அமெரிக்காவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “அமெரிக்கா பாகிஸ்தானை கழிப்பறை காகிதத்தைவிட மோசமாகப் பயன்படுத்தியது” எனத் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான பாகிஸ்தான், சமீபகாலமாக அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தானிற்கு வரி சதவிகிதம் குறைக்கப்பட்டது. மேலும், நிதி மற்றும் ராணுவத் தளவாடங்களை அதிகரிக்கும் பொருட்டு அந்நாட்டுடன் பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அசீம் முனீர் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டு, அதிபர் ட்ரம்ப் உடன் விருந்தில் கலந்துகொண்டார். அவருக்கு, காஸா அமைதி திட்டத்தில் பங்கேற்கவும் பொறுப்பு வழங்கப்பட்டது. இப்படி, இந்தியாவைவிட பல செயல்களிலும் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் இணைந்து நன்மைகளைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் அமெரிக்காவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “அமெரிக்காவின் ஆதரவைப் பெறுவதற்காக பாகிஸ்தான் மீண்டும் அந்த நாட்டுடன் இணைந்தது; இந்த அணுகுமுறை இறுதியில் நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தியது. அமெரிக்கா பாகிஸ்தானை கழிப்பறை காகிதத்தைவிட மோசமாகப் பயன்படுத்தியது. 1999க்குப் பிறகு மீண்டும் வாஷிங்டனுடன் கூட்டணி வைக்க பாகிஸ்தான் எடுத்த முடிவு, குறிப்பாக ஆப்கானிஸ்தான் தொடர்பாக, நாட்டிற்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் ஆதரவைப் பின்தொடர்வது ஒரு மிகப்பெரிய தவறான கணக்கீடு. அதன் விளைவுகளை பாகிஸ்தான் பல ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து அனுபவித்து வருகிறது. 1980களில் ஆப்கானிஸ்தானில் நடந்த சோவியத் எதிர்ப்புப் போர், எந்தவொரு உண்மையான மதக் கட்டாயத்தையும்விட, அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களால் கட்டளையிடப்பட்டது. பாகிஸ்தான் அதன் சொந்தமில்லாத மோதல்களில் பங்கேற்றது நீண்டகால உறுதியற்ற தன்மையையும் சமூக சேதத்தையும் உருவாக்கியது, இது இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை” எனக் கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
