இன்றைய பார்வையாளர்கள் பலவிதமான படங்களைப் பார்க்கிறார்கள், அவர்களுக்குப் பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது. ஷார்ட்ஸ் பார்க்கும் கலாசாரம் வந்துவிட்டது.
சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் `ஆழி’. இப்படம் பிப்ரவரி 27 வெளியாக உள்ள நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சரத்குமார் படம் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியபோது, “இன்றைய பார்வையாளர்கள் பலவிதமான படங்களைப் பார்க்கிறார்கள், அவர்களுக்கு பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது. ஷார்ட்ஸ் பார்க்கும் கலாசாரம் வந்துவிட்டது. இப்போது எதற்கு நடிப்பது என தெரியவில்லை. ஷார்ட்ஸுக்கு நடிப்பதா, ரிலீஸுக்கு நடிப்பதா, டிவிக்கு நடிப்பதா, ஓடிடிக்கு நடிப்பதா, தியேட்டருக்கு நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது. ஆனால், இந்த குழப்பம் எந்த நடிகருக்கும் தேவை இல்லை. எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.
AazhiAazhi
இந்தப் படத்தில் எனக்கு நெகட்டிவ் ரோல். இன்றைக்கு நெகடிவாக இருப்பவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள். நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகனாக இருக்க முடியாது. வில்லன் ஹீரோவாகவும், ஹீரோ வில்லனாகவும் இப்போது மாறிவிட்டனர். நான், கலை உலகைத்தான் சொல்கிறேன், வேறு எதையும் புரிந்து கொள்ளாதீர்கள். புஷ்பா 2வில் செம்மரம் கடத்துபவர்தான் ஹீரோ, அவரைப் பிடிக்க நினைக்கும் பகத் பாசில் தோற்றுத்தான் போவார். ஒரு கதைக்கு வித்தியாசம் தேவைப்படுகிறது. அதே சமயம், அது தவறு என்பதை உணர்த்தும் காட்சிகளும் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் இந்தப் படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும். மூன்றாவது நாளே வெற்றிவிழா கொண்டாடுவோம் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். இது ஒரு நல்ல படம்” என்றார்.
