ஈரானின் தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத் தளங்கள் சேதமடைந்தோ அல்லது அழிக்கப்பட்டோ உள்ளன.
Summary
மத்திய கிழக்கில் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு நடவடிக்கைக்கு பதிலடியாக ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியது. இதனால் அமெரிக்காவின் பல தசாப்த ராணுவ வியூகம் மறுபரிசீலனை செய்யப்படுகிறது.
மத்திய கிழக்கில் நடைபெற்ற போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் இருந்த அனைத்து அமெரிக்கத் தளங்கள் மீதும் ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் கொண்டு தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத் தளங்கள் சேதமடைந்தோ அல்லது அழிக்கப்பட்டோ உள்ளன.

Saudi Arabia Airbase Reuters
குவைத்தில் உள்ள ஒரு தளத்தில் நடந்த தாக்குதலில் ஆறு அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்றும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டது. ஜோர்டான் முதல் ஓமன் வரை சுமார் 20 இடங்களில் பரவியுள்ள ஏறக்குறைய 40,000 அமெரிக்கப் படைகளை அமெரிக்க மத்தியக் கட்டளை (US Central Command) பொதுவாக மேற்பார்வையிடுகிறது.
இந்நிலையில் ஈரானின் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள், அமெரிக்காவின் நீண்டகால ராணுவ வியூகத்தில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. பாரசீக வளைகுடா பகுதியில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் தற்போது ஈரானின் தாக்குதல் வரம்புக்குள் இருப்பதால், தனது ராணுவ இருப்பை மறுசீரமைப்பது குறித்து பென்டகன் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

A damaged US AWACS aircraft Reuters
சேதமடைந்த ராணுவ தளங்களை முன்பு இருந்த அதே அளவில் மீண்டும் கட்டமைப்பதா அல்லது தற்போதைய சூழலை பயன்படுத்தி, சிறிய அளவிலான ஆனால் பரவலான ராணுவ இருப்பை உருவாக்குவதா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர். இந்த ஆய்வு, பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவிட்ட அதிகாரப்பூர்வ மறுஆய்வு இல்லை என்றும், எதிர்காலத் திட்டமிடலுக்கான நடவடிக்கை மட்டுமே என்றும் பென்டகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் அதிக அளவிலான ராணுவ வீரர்கள், போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதை அமெரிக்கா பின்னடைவாக பார்க்கிறது. ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் தாக்குதல் தீவிரமடைந்த காலத்தில் அமெரிக்காவின் பாரம்பரிய ராணுவத் தளங்கள் எளிதில் கண்டறியக்கூடிய இலக்குகளாக மாறுகின்றன. இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் மற்றும் ராணுவச் சொத்துக்களை ஈரானின் ஏவுகணை தாக்குதல் வரம்பில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள பகுதிகளுக்கு மாற்றுவது ஆகும்.
குறிப்பாக ஜோர்டான், இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவின் செங்கடல் பகுதிகளில் ராணுவ இருப்பை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி கூறுகிறது.

iran war Reuters
அதாவது.பெரிய ராணுவத் தளங்களை குறைப்பது, சிறிய தளங்களை அதிகரிப்பது மற்றும் படைகளை பல இடங்களில் பிரித்து நிறுத்துவது போன்றவற்றை அமெரிக்கா செயல்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கப் படைகளை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றினாலும், ஈரானின் பதிலடி தாக்குதல் அச்சுறுத்தல் முற்றிலும் நீங்காது. மேலும் இதன் தாக்கம் அமெரிக்காவை மட்டும் பாதிக்காது. பல தசாப்தங்களாக அமெரிக்க ராணுவப் பாதுகாப்பை நம்பியுள்ள வளைகுடா நாடுகளுக்கும் இது மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும். அமெரிக்கா தனது ராணுவ இருப்பை குறைத்தால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு எப்படி இருக்கும்?
அமெரிக்காவின் தடுப்பு சக்தி குறைந்துவிட்டதாக ஈரான் கருதுமா அல்லது சிறியதாக இருந்தாலும் அதிக பாதுகாப்பான ராணுவ கட்டமைப்பை உருவாக்கி அமெரிக்கா தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்துமா போன்ற கேள்விகளுக்கு விடை போரின் அடுத்தகட்டத்தில்தான் தெரியவரும். ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அமெரிக்காவை தனது பல தசாப்த கால ராணுவ வியூகத்தையே மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளன. இது ஈரானுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
