ஈரான்-அமெரிக்கா மோதல் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் MQ-9 ரீப்பர் ட்ரோன்களில் 45 வரை இழந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் தகவல்.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அமெரிக்க ராணுவம் பயன்படுத்தி வரும் MQ-9 ரீப்பர் ரக (Reaper) கண்காணிப்பு மற்றும் தாக்குதல் ட்ரோன்களில், குறைந்தது 45 ட்ரோன்களை இந்தப் போரில் இழந்துள்ளது என தெரிய வந்திருக்கிறது. இது அமெரிக்காவின் மொத்த ரீப்பர் ட்ரோன் கையிருப்பில் சுமார் 25 சதவீதம் என கூறப்படுகிறது.

Iran – America War
போருக்கு முன்பு அமெரிக்க ராணுவத்திடம் சுமார் 185 ரீப்பர் ரக ட்ரோன்கள் இருந்ததாகவும், இதில் அமெரிக்க விமானப்படையிடம் 165 ட்ரோன்களும், கடற்படையினரிடம் 20 ட்ரோன்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த MQ-9 ரீப்பர் ரக ட்ரோன்கள் சாதாரண கண்காணிப்பு கருவிகள் மட்டுமல்ல, எதிரிகளின் உளவுத் தகவல்களை சேகரிப்பது மற்றும் துல்லியமான தாக்குதல்களை நடத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒரு MQ-9 ரீப்பர் ட்ரோனின் விலை, அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் மற்றும் ஆயுதங்களைப் பொறுத்து சுமார் 30 முதல் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் சுமார், 286 கோடி ரூபாய் முதல் 477 கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் இழந்த 45 ட்ரோன்களின் மதிப்பு மூலம் மட்டும் அமெரிக்காவுக்கான இழப்பு 1.3 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், இழந்த 45 ட்ரோன்களும் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டவை அல்ல; சில ரீப்பர் ட்ரோன்கள் தகவல் தொடர்பு இணைப்பு தோல்வியடைந்ததால் விபத்துக்குள்ளாகியுள்ளன என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் ரீப்பர் ட்ரோன்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச்சூழலில், அமெரிக்கா தனது Reaper ரக ட்ரோன்களில் சுமார் 25 சதவீதத்தை இழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது, அமெரிக்காவின் ட்ரோன் கையிருப்பில் மட்டுமின்றி, எதிர்கால ராணுவ நடவடிக்கைகளுக்கான அதன் போர்த்திறன் மீதும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
