நூற்றாண்டுகளாகத் தொடரும் காவிரி பிரச்சனை தற்போது மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்து, கர்நாடக அரசு தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சிப்பதுடன், மேகதாது அணையை எப்படியும் கட்டியே தீருவோம் என அடம்பிடித்து வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பிய நிலையில், மத்திய அரசு அதனை திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியானது.இந்த மேகதாது திட்டம் பெரும் சூழலியல் அழிவை ஏற்படுத்தும் எனக் கூறி, கர்நாடகத்தைச் சேர்ந்த சிலரும் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்துக்கு திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிடக் கோரி, தமிழக அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திலும், உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டிருந்தது.

strike
இதனைத் தொடர்ந்து, காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதலே பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழக–கர்நாடக எல்லையிலும் இரு மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சில இடங்களில் மட்டுமே போராட்டம் நடைபெற்றது.

Cauvery Water Issue
முழு அடைப்பு என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், கார்கள் வழக்கம் போல் இயங்கின. பள்ளி, கல்லூரிகள் திறந்திருந்தன. கடைகளும் திறந்திருந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தமிழக அரசு பேருந்துகளும் தடையின்றி இயங்கின. கர்நாடக அமைப்புகள் அறிவித்த போராட்டத்துக்கு கர்நாடக மக்களே ஆதரவு தெரிவிக்காததால், போராட்டத்தை ஏற்பாடு செய்த அமைப்புகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
