இந்தத் திட்டத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தது ஈரானிய குர்திஷ் போராளிகள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இஸ்ரேலும் அமெரிக்காவும் உருவாக்கிய ரகசியத் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, இஸ்ரேலின் சக்திவாய்ந்த உளவு அமைப்பான MOSSAD -க்குள் மிகப்பெரிய அதிரடி மாற்றம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொசாட்டின் இரண்டு மூத்த அதிகாரிகள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணி என்ன என்று இங்கே பார்க்கலாம்.
‘சேனல் 12’ வெளியிட்ட தகவலின்படி, MOSSAD அமைப்பின் தலைவர் ரோமன் கோஃப்மேன், இரண்டு உயர் அதிகாரிகளை நீக்கியுள்ளார். இவர்களில் ஒருவர் மொசாட்டின் உளவுப் பிரிவு இயக்குநரகத்தின் தலைவராகவும், மற்றொருவர் ஈரானுக்கான பிரிவின் தலைவராகவும் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு ரகசியத் திட்டத்தின் முக்கிய வடிவமைப்பாளர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானில் ஏற்கெனவே இருக்கும் அரசுக்கு எதிரான அதிருப்தியைப் பயன்படுத்தி, குறிப்பாக இனச் சிறுபான்மையினரிடையே விரிசலைத் தூண்டி, நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை உருவாக்குவது. இதன்மூலம் இறுதியில் ஈரான் அரசைக் கவிழ்க்கும் சூழலை உருவாக்குவதே திட்டம்.
இந்தத் திட்டத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தது ஈரானிய குர்திஷ் போராளிகள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக்குடனான எல்லைப் பகுதியில், குறிப்பாக ஈரானிய குர்திஸ்தானில் உள்ள IRGC நிலைகள் மீது தாக்குதல் நடத்தி, குர்திஷ் போராளிகள் ஈரானுக்குள் நுழைவதற்கான பாதையை உருவாக்குவது திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

Kurdish Group Reuters
ஆயிரக்கணக்கான குர்திஷ் போராளிகள் களமிறங்கினால், அதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கான ஈரானியர்கள் வீதிகளில் போராட்டத்தில் இறங்குவார்கள் என்றும், அது மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக மாறும் என்றும் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த உத்தி குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், குர்திஷ் தலைவர்களை இந்த நடவடிக்கையில் இணையுமாறு ட்ரம்ப் ஊக்குவித்ததாகவும், ராணுவ உதவி வழங்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த முன்மொழிவை குர்திஷ் தலைமை நிராகரித்ததுள்ளனர்.
இதற்கிடையே ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நெஜாத்தை, (Mahmoud Ahmadinejad) எதிர்காலத்தில் ஈரானின் தலைவராக முன்னிறுத்துவது குறித்தும் திட்டமிடப்பட்டதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.

Mahmoud Ahmadinejad Reuters
அப்போதைய மொசாட் தலைவர் டேவிட் பார்னியாவும் அஹ்மதி நெஜாத்தும் ஹங்கேரியில் நடைபெற்ற ஒரு மாநாட்டின்போது சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அஹ்மதி நெஜாத்தின் அலுவலகம் மறுத்துள்ளது.
மறுபுறம், ஈரானும் குர்திஷ் தலைவர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. பிரிவினைவாதக் குழுக்களுக்கு ஆதரவளித்தாலோ அல்லது போரில் நேரடியாக ஈடுபட்டாலோ கடுமையான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரான் எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

IRGC reuters
அதே நேரத்தில், மொசாட் தொடர்பான உளவு நடவடிக்கைகளையும் ஈரான் தீவிரமாக கண்காணித்து வருகிறது. கெர்மான் (kerman) மாகாணத்தில் ராணுவ மற்றும் வான் பாதுகாப்புத் தளங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட 21 பேரை கைதுசெய்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மொசாட்டுக்குள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த மாற்றங்கள், ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ரகசிய முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றிபெற்றன என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.
