இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பரில் நாடு திரும்புவேன் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரை கைதுசெய்ய நாடு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இடைக்கால அரசு அமைந்தது. பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பின்.என்.பி. கூட்டணி அமோக வெற்றிபெற்று அரியணையைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

sheikh hasina
அதேநேரத்தில், வன்முறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்துமாறு வங்கதேச அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று பொதுவெளியில் தோன்றி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நான் கொல்லப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம்; சிறைக்கு அனுப்பப்படலாம். எனது தலைவிதி எனக்கு முழுமையாகத் தெரியும். இருப்பினும், என் மக்கள் என்னை அழைப்பதால் நான் வங்கதேசத்திற்கு டிசம்பரில் திரும்பிச் செல்ல விரும்புகிறேன்” என்றார்.
மரண தண்டனையை எதிர்கொண்ட எந்தவொரு அரசியல் தலைவரும் நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்து தாமாக முன்வந்து தாய்நாட்டிற்குத் திரும்பியதில்லை என்பதால், ஹசீனாவின் இந்த நடவடிக்கை அவருக்கு ஒரு திருப்புமுனையை உண்டாக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஹசீனா நாட்டில் காலடி எடுத்து வைத்த உடனேயே கைது செய்யப்படுவார் என்று பிரதமரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனா
அதேநேரத்தில், ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டால், அரசின் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். மேலும், அது வேறு எந்த அரசியல் தலைவரும் முயற்சிக்காத ஒன்றாக இருக்கும். அதையெல்லாம் அவர் வெற்றிகரமாக எதிர்கொண்டு தனது கட்சியையும் மக்களையும் பலப்படுத்தி ஒன்றுசேர்க்கும்போது அதுவே அவருக்கு ஒரு வெற்றியாகவும் அமையும் எனக் கணிக்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
