வாகன ஒதுக்கீட்டில் ஏற்படும் இரட்டைப் பதிவுகளைத் தவிர்க்கும் வகையிலுமே இந்தப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் ஒரேயொரு அரசு காரை மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்யவும், அலுவல் பணிகளைத் தவிர மற்ற நேரங்களில் பொதுத்துறை நிறுவன வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் அமைச்சகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு வாகனப் பயன்பாடு தொடர்பான விதிகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. அதன்படி, மூத்த அதிகாரிகள் ஒரே ஒரு அரசு காரை மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்யவும், அலுவல் பணிகளைத் தவிர மற்ற நேரங்களில் பொதுத்துறை நிறுவன வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் அமைச்சகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2022 செப்டம்பரில் அரசு வாகனங்களின் பயன்பாடு குறித்து வெளியிட்ட முதன்மை வழிகாட்டுதல்களை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வாகன ஒதுக்கீட்டில் ஏற்படும் இரட்டைப் பதிவுகளைத் தவிர்க்கும் வகையிலுமே இந்தப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் இயங்கும் செலவினத் துறை இதுதொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும், அரசுத் துறைகளுக்கும் அனுப்பியுள்ளது.
அதன்படி, ஏற்கெனவே கார் வசதி பெறத் தகுதியுள்ள ஓர் அதிகாரிக்கு, வேறு அமைச்சகம், அரசுத் துறை, பொதுத்துறை நிறுவனம் (PSU) அல்லது தன்னாட்சி அமைப்பின் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டாலும், அவருக்குக் கூடுதலாக மற்றொரு அரசு கார் ஒதுக்கப்பட மாட்டாது. அவர் ஏற்கெனவே தமக்கு ஒதுக்கப்பட்ட காரையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உபரியாக உள்ள அல்லது தற்காலிகமாகப் பயன்பாட்டில் இல்லாத அரசு வாகனங்களை விருப்பம்போலப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அந்த வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்திவைக்க அமைச்சகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி சார்ந்த அதிகாரப்பூர்வ பயணங்களைத் தவிர, மற்ற நேரங்களில் அரசு வாகனங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு வாகனங்களின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல், பணி இரட்டிப்பை நீக்குதல் மற்றும் பொது வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இரட்டை வாகன ஒதுக்கீட்டைத் தடுக்கப்படுவதுடன் தேவையற்ற எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் கணிசமாகக் குறையும் என மத்திய அரசு நம்புகிறது. மேலும், அரசு வளங்கள் அனைத்தையும் முறையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர இது வழிவகுக்கும் என அது கருதுகிறது.
