பராசக்தி படத்தை இயக்கிய நிலையில், தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை செலுத்த கோரி இயக்குனர் சுதா கொங்காரா வழக்கு தொடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய படம் `பராசக்தி’. பொங்கல் வெளியீடாக வந்த இப்படம் இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருந்தது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்து இருந்தார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது.
ஜனநாயகன் படமும், பராசக்தி படமும் ஒரே நாளில் வெளியாவதாக இருந்து பின்னர், ஜனநாயகன் படம் தள்ளிப்போனது. பராசக்தி படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் பிப்ரவரி 7ம் தேதி Zee 5 ஓடிடி தளத்தில் படம் வெளியிடப்பட்டது. கூடவே பிப்ரவரி 12ம் தேதி சென்சார் மாற்றங்கள் செய்யப்படாத பதிப்பையும் வெளியிட்டனர். இந்நிலையில் இன்று பராசக்தி படத்தை இயக்கிய வகையில் தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி 8.39கோடி ரூபாயை செலுத்த கோரி இயக்குனர் சுதா கொங்காரா வழக்கு தொடுத்துள்ளார்.

Parasakthi
சம்பள பாக்கியை வழங்கும் வரை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள `இதயம் முரளி’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், பராசக்தி படத்தை OTT, தொலைக்காட்சி உரிமம் வழங்கியதன் மூலம் கிடைத்த வருமானத்தின் முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனு அளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, வழக்கின் விசாரணை ஜூலை 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தும், தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம் அதற்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார்.
