திருச்சி கிழக்கு தொகுதியில் தான் போட்டியிடவில்லை என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தன்னுடைய அரசியல் வருகை குறித்து வெளிப்படுத்திய நடிகரும் சமூக சேவையாளருமான ராகவா லாரன்ஸ், பெரிய அளவில் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே எனது ஒரே எண்ணம் என்றும், தான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்ற கருத்துகளை மக்களாகிய ரசிகர்களாகிய நீங்கள் கூறுங்கள் என்றும் தெரிவித்திருந்தார். அதேசமயம், ராகவா லாரன்ஸ் தவெகவில் இணைந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டிவார் எனவும் பேசப்பட்டுவந்தது.

ராகவா லாரன்ஸ்
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ராகவா லாரன்ஸ், ரோட்டில் இருக்கும் தெரு நாய்கள் கூட நம்மை பார்த்தால் கத்தும். ஒரு சில தெரு நாய்கள் பிஸ்கட் சாப்பிடாது. பிரியாணி தான் சாப்பிடும், அசைவம் தான் சாப்பிடும். அதற்கு பிடித்தவாறு உணவு கொடுக்க வேண்டும். தெரு நாய்களுக்கு இப்படி என்றால் நாட்டையே நம்பி அவர்களிடம் கொடுத்துள்ளீர்கள். மாற்றம் வேண்டும் என நினைத்து அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தீர்கள். தற்போது மாற்றம் வந்துள்ளது. அவர்களுக்கு கால அவகாசம் கொடுங்கள்” என பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சு மக்களை நாய்களுடன் ஒப்பிட்டதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்தசூழலில் தான், திருச்சி கிழக்கு தொகுதியில் தான் போட்டியிடுகிறேனா? என்பது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியது குறித்தும் நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசுகையில், ”தெருநாய்கள் குறித்து நான் செய்தியாளர் சந்திப்பில் பேசியது சர்ச்சையாகிவிட்டது. ஆனால், நான் அவ்வாறு பேசவில்லை. ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறேன். நான் அப்படி பேச மாட்டேன் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு எனக்கு ஆதரவளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, திருச்சி கிழக்குத் தொகுதியில் போடியிடுவது குறித்துப் பேசிய அவர், ”நான் திருச்சிக் கிழக்குத் தொகுதியில் போட்டியிடவில்லை. முதல்வர் விஜய் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவர் தான் அங்கு வெற்றி பெறுவார். ஏற்கனவே கட்சியில் உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கும் போது நான் திருச்சி கிழக்கு தொகுதியில் நிற்பது தர்மம் இல்லை. அதேசமயம், நான் திருச்சி கிழக்கு தொகுதியில் மட்டும் தான் போட்டியிடவில்லை எனக் கூறினேன். அதற்காக அரசியலுக்கு வரமாட்டேன் என்பதல்ல” எனத் தெரிவித்திருக்கிறார்.
