ஒவ்வொரு நாளும் எல்லாவற்றையும் மெருகேற்றுகிறேன். ஏனென்றால், என்னுடைய 2ஆவது படம் என் சிறந்த படம் எனச் சொல்லும் நிலை வர
விஷால் இயக்கி நடித்துள்ள படம் `மகுடம்’. இப்படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியிடப்பட்டது. நேற்று மாலை படத்தின் இரண்டாவது பாடல் `நச்சிந்தி மச்சானே’ பாடல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய விஷால், “நடிகராக, தயாரிப்பாளராக, சிறப்பு விருந்தினராக மேடை ஏறி இருக்கிறேன். முதல் முறை. இயக்குநராக மேடை ஏறி இருக்கிறேன். 30 வருடமாக எனக்கு இருந்த கனவு இப்போது நிஜமாகி இருக்கிறது. நாகார்ஜூனா நடிப்பில் ராம் கோபால் வர்மா இயக்கிய `சிவா’ படத்தைப் பார்த்தபோது இயக்குநர் ஆகும் முடிவு எடுத்து, இப்போது அது நிஜமாகி இருக்கிறது. சில படங்களை Ghost Direction செய்திருக்கிறேன். ஆனால் அவற்றின் பெயரை வெளியே சொல்ல முடியாது. அதிகாரப்பூர்வமாக இது என்னுடைய அறிமுகப்படம். முதல் பட இயக்குநராக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப்பார்த்துச் செய்ய வேண்டும்.
இந்தச் சமயத்தில் ஆர்.பி.சௌத்ரியை நினைவுகூருகிறேன். அவரிடம் நான் எடுத்த சில காட்சிகளைக் காட்ட வேண்டும் என நினைத்தேன். ஆனால், கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்டம் வைத்திருக்கிறார்போல. 99ஆவது படத்தை இயக்கும் பொறுப்பை மிக அர்த்தமுள்ளதாக கையாள நினைத்தேன், அதற்காக கடினமாக உழைத்தேன். இப்படத்தை முதலில் நான் இயக்குவதாக இல்லை. சில நெகட்டிவான விஷயங்களை விலக்கி வைத்துவிட்டுப் பணியாற்ற வேண்டியதாக இருந்தது.
எனவே, இந்தப் படத்துக்குள் இயக்குநராக நான் நுழைந்தேன். ஆர்.பி.சௌத்ரி எனக்கு கொடுத்த பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற உழைத்தேன். அவர், இதுவரை 44 இயக்குநர்களை அறிமுகம் செய்திருக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸில் நான் 45ஆவது அறிமுக இயக்குநர். நான் பல வருடங்களாக நினைத்திருந்த ஒரு விஷயம், அவரது தயாரிப்பில் நடப்பது கடவுளின் திட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை படங்கள் நடித்திருப்பதாலோ, சில படங்கள் Ghost Direction செய்திருப்பதாலோ, எனக்கு எல்லாம் தெரியும் என்று அர்த்தமல்ல. எனக்கு இன்னுமும் பயம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எல்லாவற்றையும் மெருகேற்றுகிறேன். ஏனென்றால், என்னுடைய 2ஆவது படம் என் சிறந்த படம் எனச் சொல்லும் நிலை வரக் கூடாது. என் முதல் படமே சிறந்த படமாக இருக்க வேண்டும்.

Vishal Awards
மேலும், இந்தப் படத்தை நான் தொடர ஒரே காரணம் ஆர்.பி. சௌத்ரி சார்தான். அவர் ஒருவருக்கு வாய்ப்பளித்தார், அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதேசமயம், இதை விட்டுவிட்டு வேறு கதை செய்யலாம் என்று நான் செல்ல முடியாது. எனவே, அந்த அடிப்படை கதையை எடுத்துக் கொண்டு, புதிய வடிவத்தில் மாற்றி படத்தைச் செய்திருக்கிறோம். இருந்தாலும், கதை என்று அவருடைய பெயர்தான் வரும், அதற்கான சம்பளமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
