அமிர்தசரஸ் மற்றும் ஜம்மு விமான நிலையங்கள் சர்வதேச எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், அங்கு தரையிறங்கும் வான்வழிப் பாதைகளில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் இதுபோன்ற எல்லை மீறலுக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது
ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று தவறுதலாகப் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுசம்பந்தமாக விமானிகள் மற்றும் அதிகாரியை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 22ஆம் தேதி டெல்லியிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று, அமிர்தசரஸில் தரையிறங்க முயன்றது. அப்போது ஓடுபாதையில் பறவைகள் இருந்ததால் வட்டமடிக்க அறிவுறுத்தப்பட்டது. அப்போது ரேடார் வழிகாட்டுதலில் ஏற்பட்ட சிறிய மாற்றத்தால், விமானம் சில நிமிடங்கள் சர்வதேச எல்லைக்கு மிக அருகில் உள்ள அட்டாரி பகுதி வழியாக, தவறுதலாகப் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைந்தது. விமானம் சுமார் 3 மைல் தூரம் வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. அமிர்தசரஸ் மற்றும் ஜம்மு விமான நிலையங்கள் சர்வதேச எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், அங்கு தரையிறங்கும் வான்வழிப் பாதைகளில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் இதுபோன்ற எல்லை மீறலுக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.

ஏர் இந்தியாமுகநூல்
பின்னர், இந்தத் தவறு உடனடியாகக் கண்டறியப்பட்டு, அமிர்தசரஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) அதிகாரிகள் லாகூர் ATC அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நிலைமையை ஒருங்கிணைத்தனர். இதையடுத்து, டெல்லிக்குத் திரும்பிய அந்த விமானம், பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. எனினும், இவ்வளவு பெரிய வான்வெளி விதிமீறல் சம்பவம் நடந்தும், அதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) உடனடியாகத் தகவல் தெரிவிக்கத் தவறியுள்ளனர். இதன் காரணமாக, விமானத்தை இயக்கிய விமானிகள் மற்றும் அமிர்தசரஸ் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோரை DGCA தற்காலிகமாகப் பணியிலிருந்து நீக்கியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் DGCA ஆகிய இரு தரப்பும், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளன. முன்னதாக, பஹல்காம் தாக்குதல் காரணமாக, இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது வான்வெளியைப் பயன்படுத்துவதற்குச் சமமான கட்டுப்பாடுகளை விதித்துத் தடையைத் தொடர்ந்து நீட்டித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
