
வருமான வரித்துறை விதித்த அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Summary
வருமான வரித்துறை விதித்த அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய், கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் ’புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஜய் தரப்பில், ’தனக்கு அபராதம் விதிப்பதாக இருந்தால் வருமானவரித் துறை சட்டத்தின்படி 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பாக விதித்து இருக்க வேண்டும்.

tvk vijay
ஆனால் காலதாமதமாக 2022ஆம் ஆண்டு வருமான வரித்துறை இந்த உத்தரவைப் பிறப்பித்து இருப்பதால் அந்த உத்தரவு செல்லாது என அறிவித்து அதை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிடப்பட்டது. பதிலுக்கு வருமானவரித்துறை தரப்பில், ’வருமானவரிச் சட்டப்படிதான் நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு சரியானதுதான்’ என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இதேபோன்ற மற்றொரு வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு நகலை தாக்கல் செய்ய விஜய் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.