ஜெனீவா ஒப்பந்தத்தை முன்னிட்டு ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை முற்றுகை தளர்வு. ஈரானிய எண்ணெய் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்கின்றன.
வளைகுடாவில் நடந்த மோதலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமெரிக்காவும் ஈரானும் கடந்த ஜூன் 14ஆம் தேதி ஒப்புக்கொண்டன. இதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் விழா சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் உடனடியாக எண்ணெய் மற்றும் எரிபொருளை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதிக்கும் என்று ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது

Hormuz
இந்நிலையில், ஈரானின் எண்ணெய் ஏற்றிச் சென்ற முதல் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) இருந்த அமெரிக்க முற்றுகைப் பகுதியிலிருந்து வெளியேறியதாக ஒரு கண்காணிப்பு இணையதளம் இன்று தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடங்கவிருப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்வு நடந்துள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி மற்றும் சேமிப்பைக் கண்காணிக்கும் ‘Tanker Trackers’ இணையதளம், ”செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கண்காணிப்புத் தரவுகளை மேற்கோள் காட்டி, இது இரண்டு மாதங்களில் ஈரானின் முதல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி” என்று குறிப்பிட்டுள்ளது .

hormuz
மேலும், “நேஷனல் ஈரானிய டேங்கர் நிறுவனத்திற்கு (NITC) சொந்தமான DIONA (9569695) மற்றும் HERO2 (9362073) ஆகிய இரண்டு VLCC சூப்பர் டேங்கர் கப்பல்கள், மொத்தம் 3.8 மில்லியன் பீப்பாய் ஈரானிய கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்று அமெரிக்கக் கடற்படையின் முற்றுகைப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளன” என்று TankerTrackers ‘X’ தளத்தில் தெரிவித்தது; பின்னர் மூன்றாவது கப்பலும் வெளியேறியதாகவும் கூறியுள்ளது.
