அமெரிக்கா சமீபத்தில் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் உருவாக்கிய க்ரோக் ஏஐ பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரானுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்திய இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத்தாக்குதலில் ஈரான் முன்னாள் உச்சத்தலைவர் அயதுல்லா காமேனி உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள ராணுவ தளவாடங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்திய நிலையில், மிகப்பெரிய போர் வெடித்தது. இப்போரில், ஈரான் மினாப் நகரில் உள்ள ஒரு பள்ளி மீதான ஏவுகணைத் தாக்குதல் கொல்லப்பட்ட 175 குழந்தைகள் உட்பட 3,600க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனினும், இப்போர் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

iran war
இந்த நிலையில் தான், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்துவதற்கு எலான் மஸ்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் (xAI) உருவாக்கிய க்ரோக் ஏஐ பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்கப் பாதுக்காப்புத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் தெரிவித்துள்ளது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
குறிப்பாக, அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமை டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு அதிகாரியான கேமரூன் ஸ்டான்லி, “ஈரானுக்கு எதிரான ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையின் போது, அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மேவன் திட்டத்தின் (ProjectMaven) ஒரு பகுதியாக எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் (xAI) உருவாக்கிய க்ரோk ஏஐ பயன்படுத்தப்பட்டது எனவும் இதன்மூலம் 96 மணி நேரத்தில் 2,000 தனித்தனி இலக்குகள் அடையாளம் காணப்பட்டு, 2,000 ஆயுதங்களை நிலைநிறுத்த பயன்படுத்த உதவியாக இருந்தது எனத் தெரிவித்திருக்கிறார்.

Grok Ai
அதேபோல், இதற்கு முன்னர் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் (Anthropic) க்ளாட் ஏஐ (Claude AI) பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது க்ராக் ஏஐ அதற்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இலக்குகளை அடையாளம் காணுதல், தரவு பகுப்பாய்வு மற்றும் திட்டமிடுதல் போன்ற பணிகளில் அதிக செயல்திறனை க்ரோக் (Grok) வழங்கியதாகவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, எதிர்கால போர்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மற்றும் அதன் நெறிமுறை சார்ந்த விளைவுகள் குறித்து உலகளவில் தீவிர விவாதங்கள் எழுந்துள்ளன.
