திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த 3 வயது சிறுமியின் உடல் உடற்கூராய்வுக்குப் பிறகு பொன்னேரி மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் ஞாயிறு இரவு 3 வயது பெண் குழந்தையை வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அவரைப் பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த 3 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி உயிரிழந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி மக்கள் உரிய பாதுகாப்பு இல்லை எனவும் வட மாநிலத்தவரை வேறு இடங்களுக்கு அனுப்ப வேண்டும் எனவும் கூறி கும்மிடிப்பூண்டி சிப்காட் சாலையில் அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

sexual violence
தொடர்ந்து பொன்னேரி சார் ஆட்சியர் அப்துல் ராசிக், சிசிடிவி கேமராக்களை பொருத்தி ரோந்து பணிகளை அதிகரிக்க செய்வதாகவும், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிக்கு உடனடியாக தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் உயிரிழந்த சிறுமியின் உடல், உடற்கூறு ஆய்வு முடித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டியில் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு வந்த தவெக சட்ட மன்ற உறுப்பினர் விஜயகுமார் பொது மக்கள் பேசினார். அப்போது அவருடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முந்தைய நாள் இரவு குற்ற சம்பவம் நடைபெற்ற நிலையில் மறுநாள் வந்தது ஏன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து புறப்பட்ட எம்எல்ஏ செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கார் ஏறி புறப்பட்டுச் சென்றார். பொதுமக்களின் கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கவில்லை எனக்கூறி எம்எல்ஏ விஜயகுமாரை கண்டித்து பொது மக்கள் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் வன்கொடுமை
இதனிடையே சிறுமியின் சடலம் சிறுமியின் ஊரின் அருகிலேயே இருக்கும் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக ஜே.சி.பி. இயந்திரம் வைத்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் சிறுமியின் சடலம் வராத நிலையில் காவல் துறையை கண்டித்து பொதுமக்கள் மீண்டும் சிப்காட் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறுமியின் உடல் பொன்னேரியில் அடக்கம் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொது மக்கள் சிறுமியின் முகத்தை தங்களுக்கு காட்டாமல் தங்களை ஏமாற்றி அலைக்கழித்து பொன்னேரியில் அடக்கம் செய்தது ஏன் எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் விறுவிறுவென உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து பொது மக்கள் அவரை சமரசம் செய்து பத்திரமாக கீழே இறக்கி அழைத்துச் சென்றனர். சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் கிராமத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என காவல் துறையினர் கூறியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக காலை முதலே கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் அடுத்தடுத்து ஈடுபட்டு வந்ததால் பரபரப்பு நிலவியது. இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி பீகாரை சேர்ந்த பிபின் மஞ்சி 19 கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து முகத்தை மூடியபடி பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.
