காங்கிரஸ் தலைமைக்குக் கட்டுப்பட்டு சித்தராமையா தனது பதவி விலகல் கடிதத்தை அளித்த நிலையில், டி.கே.சிவகுமார் முதல்வராகப் பதவியேற்றார்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய பகுப்பாய்வின்படி, மறுசீரமைக்கப்பட்ட கர்நாடக மாநில அமைச்சரவையில் உள்ள 14 அமைச்சர்களில் , 13 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். அவர்களின் சராசரி சொத்து மதிப்பு சுமார் ₹206.15 கோடியாகும்
கர்நாடகத்தில் நீண்டகாலமாக நீடித்து வந்த முதல்வர் யுத்தம் கடந்த 3ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் தலைமைக்குக் கட்டுப்பட்டு சித்தராமையா தனது பதவி விலகல் கடிதத்தை அளித்த நிலையில், டி.கே.சிவகுமார் முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 13 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். இதில், மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா கர்நாடகாவின் துணை முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட நிலையில், முதல்வர் டி.கே.எஸ்ஸின் அமைச்சரவையில், கே.எச்.முனியப்பா, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜார்கிஹோலி, கிருஷ்ண பைரே கௌடா, பிரியங்க் கார்கே, யூ.டி.காதர், ஈஸ்வர் காந்த்ரே, யதீந்திர சித்தராமையா, பைரதி சுரேஷ், டாக்டர் ஷரண் பிரகாஷ் பாட்டீல் உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

CM DK Shivakumar
இந்த நிலையில், கர்நாடக அமைச்சரவையில் உள்ள 14 அமைச்சர்களில் 13 பேர் கோடீஸ்வரர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் கர்நாடக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகிய இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், 14 அமைச்சர்களில் 13 பேரின் சுய உறுதிமொழிப் பத்திரங்களை ஆய்வு செய்துள்ளன. அதன்படி, முதல்வர் டி.கே.சிவகுமார் 1,413 கோடி ரூபாயுடன் அதிக சொத்துடையவராகவும், யூ.டி.காதர்ஃபரீத் 6.97 கோடி ரூபாயுடன் குறைந்த சொத்துடையவராகவும் உள்ளனர். அமைச்சர் கே.ஜே.ஜார்ஜின் பிரமாணப்பத்திரம் கிடைக்காததால் ஆய்வு செய்யப்படவில்லை. மேலும், ஆய்வு செய்யப்பட்ட 13 அமைச்சர்கள் மீதும் குற்றவழக்குகள் இருப்பதும், அவர்களில் 3 பேர் மீது கடுமையான குற்றவழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
