கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் தலைவராக தனது அரசியல் வாழ்வை தொடங்கிய ரிதபிரதா பானர்ஜி தற்போது மம்தா பானர்ஜியையே வீழ்த்தியுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தின் முதல்வராகவும், அந்த மாநிலத்தையே தனது கோட்டையாக மாற்றி வைத்திருந்தவருமான மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது. அக்கட்சி 80 எம்.எல்.ஏக்களை மட்டுமே வென்ற நிலையில், அங்கு பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது.

இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியே தனது தொகுதியில் தோல்வியை தழுவிய நிலையில், சொவன்தேப் சட்டோபாத்யாய் என்பவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ரிதபிரதா பேனர்ஜி, 58 எம்எல்ஏக்களின் ஆதரவை திரட்டி, தானே சபாநாயகரிடம் கடிதம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து ரிதபிரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே ரிதபிரதா பானர்ஜியை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே இரண்டாக உடைந்து மம்தாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மம்தாவை இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ள 46 வயதான ரிதபிரதா பானர்ஜி தனது மாணவர் பருவத்தில் சிபிஎம் கட்சியின் மாணவர் பிரிவான SFI மூலம் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தார். SFI-ல் பெரும் உச்சங்களை அடைந்த அவர், அந்த அமைப்பில் அகில இந்திய பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கடந்த 2014 பிப்ரவரியில் சிபிஎம் கட்சி சார்பாக மேற்கு வங்கத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த கட்சியின் இளம் தலைவராக அவர் உருவெடுத்த நிலையில், கட்சியின் கொள்கைக்கு மாறாக செயல்பட்டதாக அவர் மீது விமர்சனம் எழுந்தது.

ritabrata banerjee
தொடர்ந்து ரிதபிரதா பேனர்ஜி, ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த அதிரடிப் பேட்டியில், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களை வெளிப்படையாக விமர்சித்ததால் 2018-ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்த நிலையில், அவரை மீண்டும் மாநிலங்களை உறுப்பினராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நியமித்தது. தொடர்ந்து சமிபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் உலுபெரியா புர்பா (Uluberia Purba) தொகுதியில் போட்டியிட்டு ரிதபிரதா பானர்ஜி வெற்றி பெற்றார். இந்த நிலையில், மம்தா பானர்ஜியையே வீழ்த்தி தற்போது கட்சியை கைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்துள்ளார் ரிதபிரதா பானர்ஜி.
