மேற்கு வங்கத்தில் காலை நேரக் கூட்டங்களின்போது ‘வந்தே மாதரம்’ பாடுவதைக் கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு, முதன்முறையாக பாஜக அரசு அமைத்துள்ளது. அக்கட்சியின் முதல்வராக பதவியேற்ற சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசாங்கம், கல்வித் துறை சார்ந்த மற்றொரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது.

Madrasah
கடந்த வாரம், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும், காலை நேரக் கூட்டங்களின்போது ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு சரணங்களையும் பாடுவதைக் கட்டாயமாக்குமாறு மேற்கு வங்க அரசு உத்தரவிட்டது. தினசரி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னதாகவே, மாணவர்கள் இந்தப் தேசியப் பாடலைப் பாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து சரியாக ஒரு வாரத்திற்குப் பின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மதரஸாக்களிலும், காலை நேரக் கூட்டங்களின்போது ‘வந்தே மாதரம்’ பாடுவதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.

சுவேந்து அதிகாரி
மதரஸா இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவின்படி, அங்கீகரிக்கப்பட்ட, அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத அனைத்து மதரஸாக்களிலும் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னதாக இனி தேசியப் பாடல் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும். இந்த உத்தரவு, மாநில அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் மதரஸா கல்வித் துறையின்கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
