முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், விசாரணை தொடர மாநில அரசின் அனுமதி தேவைப்படுவதாக கூறப்படுகிறது. ஏழு மாதங்களுக்கு முன் ஆளுநருக்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பிய அமலாக்கத்துறை, இப்போது தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கும் ஆதாரங்கள் இணைந்த கடிதம் அனுப்பியதால், புதிய தமிழ்நாடு அரசு எவ்வாறு பதிலளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் சட்டவிரோதமாகப் பணம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார், உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் ஜூன் 2023-ல் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், செப்டம்பர் 2024-ல் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அமலாக்கத்துறை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தாலும், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவர் அமைச்சராக இருந்ததால், மாநில அரசின் விசாரணை அனுமதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

இதற்காக கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை ஆளுநருக்கு கடிதம் எழுந்திருந்தது.
இந்த சூழலில் இதே வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளது.

CM Vijay
அமலாக்கத்துறை அனுப்பியுள்ள மூன்று பக்கங்கள் கொண்ட கடிதம் மே 15 தேதி அனுப்பப்பட்டது. தலைமை செயலருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தில் தகுந்த ஆதாரங்கள், ரகசிய விசாரணை குறிப்புகள் மற்றும் புகார் நகல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பென் டிரைவும் இணைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீதான விசாரணைக்கு அனுமதி கோரி அமலாக்கத்துறை நேரடியாகத் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளதால், புதிய தமிழ்நாடு அரசு இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
