நாங்கள் எதிர்த்த திமுக ஆதரவோடு பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யவிருப்பதாக கூறினார். அதற்கு யாரும் சம்மதிக்கவில்லை; நாங்கள் பேரதிர்ச்சிக்குள்ளானோம்; இது தவறு வேண்டாம் என கூறினோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 எம்எல்ஏக்களை மட்டுமே பெற்று 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இந்த தேர்தலில் கிடைக்காமல் போனது. மேலும், இதுவரை இல்லாதவகையில், 100க்கும் அதிகான தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
இதற்கிடையில், அதிமுக – திமுக கூட்டணி அமைத்து கே. பழனிசாமி முதல்வராக்குவதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தொடர்ந்து வெளியாகி வந்த தகவல்கள் பலரையும் ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருந்தது. எனினும், அந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில், தவெக தலைவர் விஜய் தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல்வராக பதவியேற்றிருக்கிறார். இந்தசூழலில், அதிமுகவில் கே. பழனிசாமி தலைமை குறித்தான விவாதங்கள் அக்கட்சியில் தொடர்ந்து எழுந்து வருகிறது.
அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக கே. பழனிசாமி முன்மொழியப்பட்டிருக்கும் நிலையில், மற்றொரு தரப்பில் இருந்து எஸ்.பி. வேலுமணி முன்மொழியப்பட்டிருக்கிறார். இந்த சூழலில் தான், அதிமுகவில் செங்குத்தாக பிளவு ஏற்பட்டிருப்பதாக பார்க்கப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு 17 எம்எல்ஏக்கள் ஆதரவாக இருக்கும் நிலையில், மீதமுள்ள 30 எம்எல்ஏகள் சி.வி.சண்முகம் தரப்புக்கு ஆதரவு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. தொடர்ந்து, இந்த தரப்பைச் சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன், அவரை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கையெழுத்துப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சி.வி.சண்முகம்
அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கும் இந்தசூழலில் தான், அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது குறித்தும், அதிமுக – திமுக கூட்டணி பேசப்பட்டதா என்பது குறித்தும் இன்று செய்தியாளர்களை சந்தித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜய் முதல்வராக வர வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர்; மக்களின் முடிவை அதிமுக வரவேற்கிறது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் முடிவடைந்த பிறகு அதிமுக பொதுச்செயலர் சில முன்மொழிவுகளை வைத்தார். நாங்கள் எதிர்த்த திமுக ஆதரவோடு பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யவிருப்பதாக கூறினார். அதற்கு யாரும் சம்மதிக்கவில்லை; ஏற்றுக்கொள்ளவில்லை; நாங்கள் பேரதிர்ச்சிக்குள்ளானோம்; இது தவறு வேண்டாம் என நாங்கள் சொன்னோம். திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து 50 ஆண்டுகளுக்கும்மேல் அரசியல் செய்து வருகிறோம். திமுகவுடன் இணைந்தால் அதிமுக என்பதே இல்லாமல் போய்விடும் என்ற கருத்தை நாங்கள் கூறினோம்” எனப் தெரிவித்திருப்பதன் மூலம் திமுக – அதிமுக கூட்டணி பேசப்பட்டது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, பொதுக்குழுவைக் கூட்ட கே. பழனிசாமியைக் கேட்டுக்கொண்டுள்ளோம். அக்கூட்டத்தில் அதிமுகவின் எதிர்காலம் குறித்து விவாதிப்போம்.

சி.வி. சண்முகம் – எஸ்.பி. வேலுமணி
“அதிமுக உடையாது”
தொடர்ந்து உடனிருந்த எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “அதிமுக எப்பொழுதும் உடையாது; அதற்கு நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம்; கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து இருக்கிறோம். கட்சி தொடர் தோல்வி அடைந்துள்ளது; 2021 தேர்தலில் வெற்றி வாய்ப்பு நழுவிப் போனது; அதேபோல் இந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு இருந்தது” எனத் தெரிவித்திருக்கிறார்.
